கே.பி. பதமநாபன்
இதயத்துள் எல்லோர்க்கும் அன்பிருந்தால்
இப்புவியில் பகைப்பயிர்கள் வளர்ந்திடாது
மதசாதி இனபேத எண்ணமேதும்
மாந்தர் தம் மனதுக்குள் தோன்றிடாது
வதம் செய்யும் வன்முறையின் வாசம் ஏதும்
வாழ்வுமலர்ப் பாதையிலே வந்திடாது
நிதம்காணும் சச்சரவு சண்டை எல்லாம்
நீங்கியிருந்த ஞாலத்தில் அமைதி பூக்கும்!
அன்பென்னும் மனநிலத்தில் கருணை வித்தை
ஆழமுடன் நட்டிங்கே இரக்க நீரை
மென்மழைபோல் பாய்ச்சியதில் பரிவுரத்தை
மேலாகத்து விட்டால் மேன்மையான
நன்மனித நேயமெனும் நற்பழங்கள்
நாள்முழுதும் கனிந்திங்கே தொங்கும் திண்ணம்
இன்பங்கள் நிறைந்திட்ட அமைதி பூங்கா
என்றாகும் இஞ்ஞாலம் மனிதம் ஓங்கும்!
Leave a Reply