நா.சுயம்பு
நீ…….
கங்கையைப் போல்
புனிதமானவன்
காவிரியைப் போல்
எழுச்சியானவன்
இருந்தும்
வைகையைப் போல்
எளிமையானவன்!
நீ………..
ஜனநாயக இமயத்தில் பூத்த
சோஷலிச மலர்
சர்வ வல்லமையும் பெற்ற கிங் மேக்கர்
இருந்தும்
சலனமற்ற ஆறாய்
கடந்தவன்!
நீ………
கலை மகளின்
அவதாரமாய் வந்தவன்
மலை மகளின் மன உறுதியை பெற்றவன்
இருந்தும்
“காமாட்சி” என்றே
அழைக்கப் பட்டவன்!
நீ……..
சுதந்திர மங்கை மேல் கொண்ட
தீராக் காதலால்
எந்த சுந்தரியையும்
ஏறெடுத்து பார்க்காத சுந்தரன்!
நீ….
ஆற்றைக் அடக்கி
அணை கட்டியவன்
ஆலைகள் கட்டி
வறுமையை அடக்கியவன்
ஆயினும்
அசையாத ஊற்றாக
அடங்கி இருந்தவன்!
நீ………
பாடசாலை பெருக்கி
ஞான வேள்வி நடத்தியவன்
பயிர்ச்சோலை பெருக்கி
தாய் நாட்டை
செதுக்கியவன்!
இருந்தும் ஒரு
பரதேசியைப் போல்
வாழ்ந்து போனவன்!
நீ……….
பச்சைத் தமிழன் தான்
படிக்காத மேதை தான்
கர்ம வீரர்தான்
சந்தேகமில்லை
நீ வாழ்ந்த காலத்தில்
நாங்களும் வாழ்ந்தோம் என்று
நாங்கள் மட்டுமல்ல
இந்த நாடே கர்வம் கொள்கிறது!
Leave a Reply