– சிவ. விஜயபாரதி
மழிக்காத தாடி
அழுக்கேறியச் சட்டை
பழுப்பேறிய தலை
அப்பாவின் அடையாளம்.
நைந்த வாழ்வை
ஊக்குக்கோர்த்து
பிய்ந்த செருப்போடு
அணிந்திருப்பார்.
பண்டிகை நாட்களில்
புலர்வதற்குள் செல்பவர்
யாரிடம் கடன் வாங்குவாரோ
துண்டின் ஒரு முனையில் மளிகை சாமான்களை
உருண்டையாக
மூட்டைபோல் கட்டி
முதுகுப்பக்கம் தொங்கவிட்டு
கையில் ஆட்டின் தலையோடு
பெருமை மின்னும் ராசா போல
உறுமத்தில்தான் வீடு வருவார்.
நாங்கள் உறங்குவதாய் படுத்திருக்கும் இரவுகளில்
நீளும் வறுமை பட்டியலை
அம்மாவின் காதுகளுக்குச் சொல்லும் அவர்
ஒரு நாளும் விட்டுச் சொன்னதில்லை எங்களுக்கு.
Leave a Reply