– பைசல். தக்கலை
குளம்
என்ற கவிதையை
எழுதினேன்
கலங்கியது
மெல்லமெல்ல
தெளியட்டும்
குளத்தினுள்
ஒரு மீனாக
வாழ்கிறேன்
குளத்தை
ஒரு தவளை
சுமப்பதைப் பார்த்தேன்
இரவில் குளம்
தன்னைத்தானே
நீராடுகிறது
நட்டநடுவெளியில்
ஒரு முதியவன்
ஒரு சிறு ஆயுதத்தால்
பெருங்குளத்தைத் தோண்டிக் கொண்டிருக்கிறான்
ஒருவன் குளத்தை
மயிலிறகால்
ஆற்றுப்படுத்துகிறான்
ஒரு குளத்தை
நதிபோல் இழுக்கிறார்கள்
இருவர்
கைவிடும் போது
குளமாகிவிடுகிறது
குளத்தின் மேல்
பாலம் போட முயல
இயந்திரங்கள் மிதக்கிறது
பாலங்களும் மிதக்கிறது
நீர் நிறைந்த குளமாக இருக்கும் போதும் எல்லாமே மிதந்தன
நீர் மண்ணைத்
தொடாமல் மிதக்கும் மிதவை
குளங்கள் பூமியில் பதிக்கப்பட்ட
வளையங்கள்
Leave a Reply