பெட்ரோல்,டீசல் விலை!
எவ்வளவு என்றாலும்…..
உயர்த்திக் கொள்ளுங்கள்!
ஏனெனில் எங்களுக்கு
உலகம் தெரியாது.
சமையல் எரிவாயு விலை!
எவ்வளவு என்றாலும்….
உயர்த்திக் கொள்ளுங்கள்!
ஏனெனில் எங்களுக்கு
சிந்திக்கத் தெரியாது.
அந்தவரி இந்தவரியென்று,
எத்தனை வரிகளுண்டோ…..
வசூலித்துக் கொள்ளுங்கள்!
ஏனெனில் நாங்கள்
குட்டக் குட்ட குனிபவர்கள்.
வங்கிக் கடன்கள்!
எத்தனை லட்சங்கோடி என்றாலும்….
தள்ளுபடி செய்யுங்கள்!
ஏனெனில் எங்களுக்கு
கேள்வி கேட்கத் தெரியாது.
வழிபாட்டுத் தலங்கள்!
எத்தனை ஆயிரங்கள் என்றாலும்….
இடித்துத் தரை மட்டமாக்குங்கள்!
ஏனெனில் எங்களுக்கு
சமதர்மம் தெரியாது.
சாதி மதத்தை வைத்து
நூறாண்டு வரையிலும்…..
பிழைப்பு நடத்துங்கள்!
ஏனெனில் எங்களுக்கு
வாய்மைநேர்மை கிடையாது.
இலவசத் திட்டங்கள்!
எத்தனை உதிக்கிறதோ…
அறிவித்து ஓட்டுவாங்குங்கள்!
ஏனெனில் எங்களுக்கு
உழைத்துவாழப் பிடிக்காது.
தேர்தலில் ஓட்டுக்குப் பணம்!
எவ்வளவு அதிகமோ…..
அவ்வளவு வழங்குங்கள்!
ஏனெனில் எங்களுக்கு
தன்மானம் கிடையாது.
அநீதியான சட்டங்கள்!
எத்தனை தேவையோ….
தினந்தினம் இயற்றுங்கள்!
ஏனெனில் எங்களின்
அடிமைப்புத்தி மாறாது.
ஒட்டுமொத்த நாட்டையும்!
யாருக்கு வேண்டுமானாலும்….
விற்றுக் கொழுத்து வாழுங்கள்!
ஏன் தெரியுமா?
நாங்கள் இந்தியர்கள்!!
கவிஞர் உதயசக்தி
Leave a Reply