– இரா. அரிகரசுதன்
ஊர்க்கிழவி தலைமையில்
அம்மன் பாட்டுக்கு
வட்டக்கும்மி கொட்டும்
கோயில் முற்றம்
காவேரிப் பொங்கும் கொள்ளிடத்து
ஆற்றுக்குள்ளிருந்து
கருங்காளைகளைக் கழுவித்துடைத்து
வண்டிபூட்டி வரும்
பூலான்தேவியின் அப்பா
கோவில் சுற்றுச் சுவரில்
ஏற்றியிருந்த திருவள்ளுவன் பார்க்க
செவ்வந்திபூச் சடை பின்னிய
இளையவள் குறும்புக்காரி
காணும் பொங்கலில்
குரவையிட்டு ஆடுகிறாள்
ஆடுகிறாள் அவள் அம்மையும்
பாட்டியும் அண்டைவீட்டு
மாமியும்
ஆடி துடியேறி
மயங்கிச் சரியும் பெண்டிரின்
மருங்கைப் பிடித்து
தூக்கி நிறுத்தும் வீராங்கணை
தொடை தட்டிச் சிரிக்கிறாள்
கும்மி கொட்டுக்கிடையில்
கபாடி கபாடி எனும்
சந்தம் மண்புரளுகிறது
பாடிப் பாடி தொண்டை
வற்றிய ஊர்க்கிழவியின்
பாட்டை வாங்கிக்
கொள்கிறாள் அத்தை
சொம்புத் தண்ணீர் சுமந்துவருகிறான்
மாமன்
இப்போது
நட்ட நடுஇரவில்
காவிரிக் கரையில்
பொங்குகிறது பொங்கல்
வட்டக்கும்மி கொட்டும்
பெண்டிர் எல்லாம்
கொட்டுங்கடி கொட்டி ஆடுங்கடி
பொங்கலிலே நல்ல பொங்கலிலே
பொலிக தமிழர் என்று
பாடுங்கடி கொட்டி ஆடுங்கடி
Leave a Reply