நாம் யாரும் அறிவாளி இல்லை! ஏன்?

நாம் யாரும் அறிவாளி இல்லை! ஏன்?

  • By Magazine
  • |

வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன்

அறிவு என்பது வரையறுக்கப்பட்ட சிந்தனை வடிவங்களால் கட்டமைக்கப்படுகிறது. அந்த சிந்தனை வடிவங்களை மனம் எனும் மாயச்செயல் உருவாக்குகின்றது. மாயச்செயல் மூளையின் இயக்கத்தால் உருவாகிறது. அதற்கு “ஷைக்கான்” எனப்படும் மனதின் நுண்ணதிர்வு மூலக்கூறுகள் காரணமாகின்றன. இந்த மனதின் அதிர்வுகள் அறிவுப்பொறிகளோடு நான்குவித அறிவுநிலைகளை ஏற்படுத்துகின்றது. அறிவுநிலைகளின் நிலைகளுக்கேற்பவே மனித சிந்தனைகளின் பார்த்தல், கேட்டல், நுகரல், அனுமானித்தல், புரிதல், உணர்தல், தெளிதல் போன்றவைகள் அறிதலாக மாற்றப்பட்டு அறிவாக பதிவாகி மூளையில் இடம்பெறுகின்றன. இவற்றுள் பண்புநிலை அடையாத உணர்தல், தெளிதல் எனும் அறிவுகள் மூடங்களாகவோ அல்லது அறிவியல் தெளிவுகள் இல்லாமலேயோ ஒருவரிடம் நிலைபெற்று விடுகிறது. இந்த அடிப்படையை உலகின் எந்த சீவராசிகளும் முற்றறிவு பெற்ற உயிரியாக கருதவே முடியாது என்பதே கண்கூடான உண்மையாகும்.

இதுவே நெடுங்கால நம்பிக்கைகளுக்கும், வாழ்க்கை முறைகளுக்கும் வழிகாட்டியாய் அமைவதோடு புதிய கண்டுபிடிப்புகளுக்கும், புதிய சிந்தனை வழி படைப்புகளை உருவாக்குவதற்கும் காரணமாகிறது.

அறிவுசார் வல்லுநர்கள் தத்தம் கண்ணுக்கெட்டியவைகளையும் நேரில் கண்டு தெளியும் அறிவுகளையும் சார்ந்து செயல்பட விரும்புவதால் நம்மால் உணரமுடியாத எளிதில் அறிய முடியாத, இயற்கை முடிச்சுகளுக்குள் பின்னிப் பிணைந்து கிடக்கும் பல்லாயிரக்கணக்கான உண்மைகள் பயித்தியக்காரத்தனங்களாகக் கருதப்படுகின்றன. அபரிமிதமான எத்தனையோ ஆற்றல்கள் அத்தகைய சிந்தனையாளர்களின் பரப்புதல்களால் அறியாமை எனும் சுவட்டுக்குள் அடிமையாக்கப்படுகின்றன. இன்றைய நவீன வளர்ச்சியில் அவைகள் ஆய்வு செய்யப்பட்டால் உள்ளே புதைந்திருக்கும் பல பயன்மிக்க உண்மைகள் உருவாக்கம் பெற வாய்ப்புண்டு.

இயற்கை அதிசயம் நிறைந்தது. அறிவதற்கும், உணர்வதற்கும், சிந்திப்பதற்கும், தெளிவதற்கும் மட்டுமன்றி ஆச்சரியப்படுவதற்கும் பல அறிவு கருத்துக்களைக் கண் முன்னே காட்சிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

நீர்த்தொட்டி ஒன்றில் குளிர்ந்த நீரை நிறைத்து அறிவியல் அறிஞர்கள் அதில் மனிதர்களை நிற்க வைத்து ஆய்வு மேற்கொண்டனர். உறைநிலை அளவைக் கொண்ட அந்நீரில் மூவர் இறக்கப்பட்டனர். ஒருவர் இறங்கிய 10 நொடிகளிலேயே துள்ளிக் குதித்து வெளியே வந்துவிட்டார். மற்றொருவர் 5 நிமிடங்கள் வரை தாக்குப்பிடித்தார். ஆனால், படிப்படியாக தளர்ந்து மயக்கமடையும் அளவிற்கு வந்துவிட்டார். மற்றொருவரோ அந்நீரில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தார். இவருக்கு எந்தவித இன்னலும் தோன்றவில்லை. சாதாரண நீரில் குளிப்பதைப் போன்று ஆரோக்கியமாகவே இருந்தார். இம்மூவரின் உடல் வெப்பநிலை, இரத்த அழுத்தம், இரத்த உறைநிலை என பல பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் ஒவ்வொருவரும் வேறுவேறு நிலையில் இருந்தனர். இது எப்படி? இதற்கு என்ன காரணம்? இத்தன்மையை மனிதனுக்குள் உருவாக்கும் உறுப்பு அல்லது செல் எது? என கேள்விக் கணைகளோடு இன்றும் ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

                கணினியின் வேகத்திற்கும் அப்பாற்பட்டு கணக்கிட்டுக் காட்டிய சகுந்தலா தேவிக்கு அத்திறன் எங்கிருந்து வந்தது? அதனை உருவாக்கும் திறன் அவருக்கு மட்டும் ஏன்? எப்படி? எங்கிருந்து உருவாகிறது என்பது ஆய்வுக்குரிய ஒன்றாகவே இன்றும் காணப்படுகிறது.

ஒரு மாணவன் இருளில் நிறுத்தப்பட்டு அவனிடம் சாலையில் போகும் வாகனங்களின் பதிவு எண்கள் கேட்கப்படுகிறது. அவன் மடமடவென ஒரு பிழையும் இல்லாமல் அவைகளை கொட்டித் தீர்க்கிறான். இது எப்படி அவனுக்கு சாத்தியமாகிறது என்பது அறிவியல் ஆய்வுகள் மூலம் உணரப்பட வேண்டிய ஒன்று. முடியும் என்பது வேறு. அஃது எப்படி முடிகிறது என தெளியப்பட்டால் மட்டுமே அறிவியல்.

                ஒரு மனிதன் தன் பார்வையால் மிகப்பெரிய இரும்புக்கம்பியை வளைத்துக் காட்டுகிறான். இது சாதாரணமாக எல்லோராலும் முடிவதில்லை. ஏன்? இது எதனால் எப்படி சாத்தியமாகிறது? இன்று வரை அறிவியல் விடை கிடைக்கவில்லை.

ஒருவன் ஓரிடத்தில் அமர்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கிறான். எதிரில் ஒரு முதியவர் அவன் பெயர், அவன் சிந்திக்கும் கருத்து, அவன் வீட்டிலுள்ளோர் பெயர்கள், அவன் வாழ்வில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் நேரில் கண்டதுபோல் கூறிவிடுகிறார். இவர்கள் இதற்குமுன் சந்தித்தது இல்லை. இருவரும் வேறு இடத்தை சேர்ந்தவர்கள். இது எப்படி சாத்தியமாகிறது. உடலுக்கு இத்தன்மையை உருவாக்கும் செல் தொகுப்புகள் எவை? இதனை அறிவியல் ஆய்வுகளால் மட்டுமே புலப்படுத்த முடியும்.

ஒருவர் மற்றொருவரை பார்த்தே மயக்கமடையச் செய்கிறார். பலரை வேறிடத்தில் அமர வைத்து நினைத்தே மயக்கமடையச் செய்கிறார். இது வர்மக்கலையில் ஒருவரால் நிகழ்த்தப்பட்ட ஒன்று. இது எப்படி சாத்தியமாகிறது?

இருவர் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு சுரத்தோடு வருகின்றனர். ஒருவர் 33 வயதுடைய இளைஞர். மற்றொருவர் 68 வயதுடைய முதியவர். இருவருடைய இரத்தம், இதயம் போன்ற பல ஆய்வுகள் நடத்தப்பட்டதில் 33 வயதுடைய இளைஞருக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லை. நலமாகவே உள்ளார். வெறும் “வைரல்” சுரம் தான். முதியவருக்கு இரத்த அழுத்தம், சர்க்கரைநோய், மூத்திர தடை, இதய பலவீனம் என வேறு பல நோய்கள் இருந்தன. இருவருக்கும் சுரத்துக்கான எளிமையான மருந்துகள் கொடுக்கப்பட்ட நிலையில் அந்த இளைஞரின் உடல்நிலை மோசமாகி விடுகிறது. முதியவர் உடனடியாகவே நலமடைந்து விடுகிறார். எனில், ஆரோக்கியமாக இருப்பவனின் தாங்கு திறனுக்கும், பலநோய்களில் அவதிப்பட்டாலும் அந்த நபரின் தாங்குதிறனுக்கும் எவ்வாறு வேறுபாடு? ஏன்? எதனால்? எப்படி?

ரஷ்ய நாட்டு உளவியல் பேராசிரியை “ரோஷலிண்ட் ஹேவுட்” ஒருமுறை தன் காரில் வெளியூர் சென்று கொண்டிருந்தார். தனியாகவே சென்று கொண்டிருந்த அவரது கார் திடீரென வழியில் நின்றுவிட்டது. அந்த இடமோ ஆட்கள் நடமாட்டமே இல்லாத ஒரு காட்டுப்பகுதி. மிக கடுமையான வெப்பம் நிலவிக்கொண்டிருந்தது. பேராசிரியை ஒரு மரத்தடியில் நீண்டநேரம் அமர்ந்து ஏதாவது ஒரு வாகனம் வராதா எனக் காத்துக் கொண்டிருந்தார். எதுவும் வரவில்லை. நீண்டநேரம் காத்திருந்த அவர் கண்கள் முன் சிறிய கார் ஒன்று புழுதி பறக்க வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

                வேகமாக வந்த கார் தன்னருகில் வந்து நின்றதைக் கண்டு ஆச்சரியமடைந்தார். காரிலிருந்து தன் கணவர் இறங்கி வந்தது அவரை மேலும் ஆச்சரியமடையச் செய்தது. எந்த தொடர்பும் கொள்ள முடியாத சூளலில் அவர்களின் இந்த தொடர்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அப்போது கணவர் “நான் அலுவலகத்தில் இருந்தபோது நீ எதோ பிரட்சனையில் மாட்டி தவிப்பதுபோன்று என் உள்ளுணர்வுக்குள் தோன்றியது. அதில் நீ காரிலிருந்து இறங்கி நிற்கும் இந்த இடம், மரங்கள் அனைத்தும் காட்சியாய் வந்து நின்றது. அதனால் தான் எதையும் யோசிக்காமல் வந்துவிட்டேன் என்று சொன்னார்”. இதை அறிவியல் உலகம் “டெலிபதி” எனக் குறிப்பிடுகின்றது. தன் கணவன் இப்போது இங்கு இருந்திருக்கக் கூடாதா என எண்ணிய பேராசிரியை ரோஷ்லிண்டின் எண்ணமானது அடித்தள மனதின் வாயிலாக கணவனுக்கு தகவல் அனுப்பி உள்ளது. அதனை கணவனின் அடித்தளமானது வாங்கி நினைவு மனதிற்கு உணர்த்தியதே அவர் அதனை எளிதில் புரிந்து கொள்வதற்கு காரணமாகியது. இதில் இரு உள்ளங்கள் பரிமாறும் உணர்வலைகள் தகவல்களை பரிமாறிக் கொண்டதால் விளைந்த விளைவு இரண்டாம் நிலை விளைவாகும் (Secondary effect).  ஆனால், இவை தோன்றுவதற்கான முதல்நிலை காரண காரிய செல்கள் எவை? எப்படி? எந்த அடிப்படையில்? மற்ற மனதோடு உறவுகொள்கிறது… கேள்விக்குறியே?

இப்படி ஆயிரமாயிரம் அதிசயங்கள் நிறைந்த இயற்கையானது படிநிலை வளர்ச்சி மாற்றங்களைப் பெற்றுத் திகழ்கிறது. வாழ்வின் புரிதல்களும், தெளிதல்களும், செயல்பாடுகளும் அவரவர் அறிவு, சூளல், புரிதல், உணர்தல், திருப்பி சிந்தித்தல் எனும் பகுப்பாய்வின் திறன்களாலேயே முற்றுபெற்று குணநலன்களாகின்றன. தன்னைப் போல் பிறனை எண்ணுவது ஓரளவு ஒப்புமை உடையதே தவிர முழுமையானது அல்ல. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுவதும் இத்தகையதே.

                மனிதன் இயற்கையின் புரதமணிகளால் உருவாக்கப்பட்டு சூரியன், கோள்கள் மற்றும் விண்மீன்களின் கதிரியக்கங்களால் ஆற்றல் பெற்று இயங்கிய உயிரியல் பரிணாமத்தின் வடிவினைப் பெற்றவன். இவனது ஒரு செல்லைப் பிரித்து அதனை பகுப்பாய்வு செய்தால் செல் பொருட்களாக பல்வேறு வகையானவைகளைக் காணமுடிகிறது. அதனுள் இருக்கும் குரோமோசோம் எனும் இழைகளைப் பிரித்தால் மரபணு எனும் கூற்றினை அடைகிறோம். அந்த கூற்றினைப் பிரித்தால் நான்கு முக்கிய நுண் பொருட்களைப் பார்க்கிறோம். அவைகளை ஆய்ந்தால் சிலவகை புரதங்களைப் பார்க்கிறோம். அந்த சிலவகை புரதங்களை உருவாக்கும் அமினோ ஆசிட்டுகளோடு இணைந்து ஆயிரக்கணக்கான புரதங்களை தேவைக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்வது இன்னும் அறிவியல் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டேயிருக்கிறது. இது மட்டுமல்ல, மரபணுக்கூறுகளை உருவாக்கும் ஞிழிகி தன்னைப்போல் ஒன்றை உருவாக்கும் தகுதியற்றது எனில், அதனை உருவாக்கும் படிநிலை ஒன்று உள்ளது. அதுவே ஸிழிகி. இந்த ஸிழிகி அடிப்படை கூற்றையும் பிரித்தால் நாம் தோன்றிய காலத்து புரதத்தைக் கண்டுபிடித்து விடலாம். இஃது இன்றைய அறிவியல் வளர்ச்சி. இதை ஏன் இங்கு எழுதுகிறோம் எனில், உடல் தூலம் எனப்படும் பருவுடலின் இந்த தொடக்கம் உடல் செல்கள் அனைத்திலும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதால் உடல் ஓர் ஒருங்கிணைந்த உணர்வு பெறும் பொருள் என்பதை உணர்த்துவதற்கே. இதுபோலவே உலகின் அனைத்து உயிரிப்பொருள்களுக்கும் நமக்கும் தொடர்பு உண்டு என வர்மம் எனும் தமிழர்கலை வெளிப்படுத்தும் உண்மையும் இங்கு கருதற்பாலது.

மனித உடலானது, பல்லாயிரம் கோடி செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த செல்கள் ஒன்றை ஒன்று இடைவிடா தொடர்பு பெற்றே இயங்குகின்றன. அந்த இயக்க அசைவுகள் ஒவ்வொரு செல்லின் வெளிப்படலத்தின் மேல் காணப்படும் நுண்ணிய இழைகள் (Microvilla)  வாயிலாகவும், அவை மிதக்கும் நீர்மப்பொருள் மூலமாகவும் எளிதில் ஒன்றையொன்று தொடர்புபடுத்த உதவுவதால் தலை முதல் கால் வரை ஒரே நேரத்தில் உணர்வு ஏற்படுத்தக் காரணமாகின்றன. இந்த வகை தொடர்பையே வர்ம தொடுதல் மருத்துவத்திற்கான முதற்கட்ட அறிவியல் கூறாக கருத இடமளிக்கிறது. இது தவிர, பல்வேறு தொடர்பு இயக்கங்களாகி அவை மின்காந்த இயக்கமாக தூண்டப்படும் இடத்திற்கும், நோக்கத்திற்கும் ஏற்ப பலனையும் ஏற்படுத்துகின்றது என செல்லியல் ஆய்வறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *