அழகு

அழகு

  • By Magazine
  • |

பாவலர் கருமலைத்தமிழாழன்

சோலைக்குப் பூவழகு; நீலவானை

                சொக்கவைக்கும் நிலவழகு; செம்மைபூசும்

காலைக்குக் கதிரழகு; கிராமத்திற்குக்

                கரும்பச்சை வயலழகு; இல்லத்திற்கு

மாலையிட்ட நல்மனையாள் அழகு; தூய்மை

                மனங்கள் தாம் மாந்தர்க்கழகு; ஓங்குயர்ந்த

ஆலைகளே நாட்டழகு; வளத்தைக் கூட்டும்

                அருந்தொழில்கள் உழைப்பிற்கே அழகைச் சேர்க்கும் !

புல்லிற்குப் பனிமுத்தே அழகு; தேனே

                புறவழகுப் பூவிற்கு அழகு; நிற்கும்

கல்மலையே பூமிக்கு அழகு; அந்தக்

                கல்மலைக்கு வெண்முகிலே அழகு; பாட்டின்

பல்சுவைக்கோ உவமைகளே அழகு; நேயம்

                பதிந்த நெஞ்சே மாந்தர்க்கு அழகு; நாட்டைப்

பல்வகையில் உயர்த்துகின்ற உழைப்பின் மூலம்

                படைக்கின்ற தொழில்வளமே அழகாம் என்றும் !

மலையளவு பொன்னிருந்தும் உழைக்காவிட்டால்

                மணலளவு பொன்கூடத் தங்கிடாது

அலையலையாய்த் தோல்வி வந்து வீழ்த்தும் போதும்

                அடுத்தடுத்து நாம் முயன்றால் தழுவும் வெற்றி

தலையான அறிவியலைப் பயன்படுத்தித்

                தரமான தொழில்வளத்தைப் பெருக்குவிப்போம்

நிலையாக நாமுழைத்தால் தொழிலில் நாடும்

                நிமிர்ந்து நிற்கும் ;அழகாகப் பொலியும் வாழ்வே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *