அண்ணலின்  அழுகை அறிந்தார் யார்?

அண்ணலின்  அழுகை அறிந்தார் யார்?

  • By Magazine
  • |

கே.பி.பத்மநாபன்

அண்ணலார் அமரராகி ஆண்டுகள் எழுபத்தேழும்

மண்ணிதில் மறைந்து போச்சு; மகானையே மறந்து மாச்சு;

உண்மையே உரைத்தோன் நாட்டில் ஊழலும் பெருகிப் போச்சு;

பெண்மையை மதித்தோன் நாட்டில் பெண்மைவன் முறையுமாச்சு;

கண்ணியம் கட்டுப்பாட்டைக் கடமையாய்க் கொண்டோன் மண்ணில்

பண்ணிடும் பாதகங்கள் பலப்பல பெருகியாச்சு;

அண்டியோர் தம்மை அன்பாய் ஆதரித்தோனின் மண்ணில்

எண்ணிலாக் கலவரங்கள் எனதினம் ஆகியாச்சு;

உண்ணுதல் உடுத்தல் தம்மில் உயரிய எளிமை கண்ட

கண்ணிய காந்தி மண்ணில் கருநிதி பெருகியாச்சு;

புண்ணியன் வாழ்ந்திம் மண்தான் புதுமைகள் என்னும் பேரில்

பண்ணிடும் பாவங்கள் தம் பல்கலைக்கழக மாச்சு;

எண்ணிலா ஏழைக்காக என்றுமே உழைத்தே ஓய்ந்தோன்

நண்ணிய நன்மை எல்லாம் நாட்டினில் குறைந்தே போச்சு;

எண்ணிடும் பணத்தாளில் தான் ஏந்தலும் சிரிக்கின்றார் காண்

விண்ணிலே இருந்து கண்ணீர் விடுவதை யாரறிந்தார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *