“முடவாட்டின்கால்” கிழங்கு

“முடவாட்டின்கால்” கிழங்கு

  • By Magazine
  • |

நமது மூலிகை மருத்துவர்

நீர்ச்சத்துள்ள பாறைகளின் இடுக்குகளிலும், பெரிய மரங்களின் பட்டைகளிலும் ஒட்டி வளரும். பெரணி வகை செடி தான் முடவாட்டின் கால் செடி. இதன் வேர்தான் கிழங்கின் மற்றுருவம் பெற்றுள்ளது. இக்கிழங்கு மற்றவகை கிழங்குகளை போன்று மண்ணிற்குள் புதைந்திருப்பதில்லை.

இதன் பூர்வீகம் தென்னிந்தியா. தமிழ்நாட்டில் கொல்லிமலை, ஏற்காடு, சேர்வராயன் மலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மலைப் பகுதிகளிலும் காணப்படுகிறது.

இக்கிழங்கு ரோமம் நிறைந்து செம்மறி ஆட்டின் கால் போன்று காணப்படும். இலை பெரியதாக இறக்கை போன்று அழகாக காணப்படும்.

இக்கிழங்கு அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்டு முடவன் போன்று ஆனாலும் எழுந்து நடக்க வைக்கச் செய்யும் தன்மை உள்ளதாக கருதப்படுகிறது.

இச்செடி கரியமில வாயுவை உறிஞ்சி சுத்தமான பிராண வாயுவை வளிமண்டலத்திற்கு கொடுத்து காற்றை சுத்தம் செய்கிறது. முடவாட்டின்கால் கிழங்கின் மருத்துவப்பயன்களை பெற, இதனை சூப் செய்து பயன்படுத்தலாம்.

தாவரவியல் பெயர்

                                Drynaria qucercifolia

ஆங்கிலப்பெயர் :

Veg Goat Leg

வேறுபெயர்கள்

முடவன் ஆட்டுகால், மூட்டுவலி கிழங்கு, பன்னகிழங்கு, ஆட்டுகால் கிழங்கு

அடங்கியுள்ள சத்துப்பொருள்கள்

விட்டமின் C சத்து, விட்டமின் B சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புசத்து, கால்சியம், சிலிக்கா, நார்சத்து.

அடங்கியுள்ள தாவர வேதிப்பொருள்கள்

Friedlin, beta-amyrin, beta-sitosterol, Coumarins, Catechin, Naringin, Xantho proteins, Phenols போன்றவை.

முடவாட்டுக்கால் கிழங்கின் மருத்துவப்பயன்கள்

1. மூட்டுவலி மற்றும் வாதநோய்களுக்கு

முடவாட்டின் கால் கிழங்கு சுமார் 50 கிராம் அளவு எடுத்து தோல் சீவி அரைத்து முறைப்படி சூப் செய்து தினம் இருவேளை வீதம் இரு மாதங்கள் தொடர்ந்து பருகி வருவது மூட்டுவீக்கம், வலி, வாதநோய்கள், எலும்பு தேய்வு, முதுகுவலி, எலும்புப்பலகீனம் போன்றவற்றிற்கு சிறந்தது.

2. முடவாட்டின்கால் சூப் செய்முறை (பச்சைகிழங்கு)

முடவாட்டின் கால் கிழங்கின் மேல் இருக்கும் ரோமம் மற்றும் தோலை சீவி சுமார் 50 கிராம் அளவு எடுத்து சிறுதுண்டுகளாக வெட்டி அத்துடன் 2 கிராம்பு, சிறிது பெருஞ்சீரகம், பூண்டு, இஞ்சி, மல்லி, நல்லமிளகு, மஞ்சள் சேர்த்து பட்டுபோல் அரைக்காமல் திருதிருவென அரைத்து அத்துடன் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து பாதியாக வற்ற வைத்து அத்துடன் சிறிது உப்பு மற்றும் மல்லிதழை சேர்த்து வடித்து தினம் இருவேளை வீதம் குடிக்கலாம.

குறிப்பு : மேற்படி சூப்பிற்கு குக்கரை பயன்படுத்தினால் 4 முதல் 5 விசில் சத்தம் வரை வைக்கலாம்.

3. முடவாட்டின்கால் சூப் செய்முறை (உலர்ந்த கிழங்கு)

முடவாட்டின்கால் கிழங்கு பச்சையாக கிடைத்தால், மேல் தோல் சீவி, காரட் துருவல் போல் துருவி உலர்த்தி கொள்ளலாம் அல்லது உலர்ந்த கிழங்காக இருப்பின் மேல் தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளலாம். இத்துடன் சிறிது நல்லமிளகு, சீரகம், மஞ்சள் சேர்த்து பொடித்து கொள்ள வேண்டும்.

மேற்படி தயார் செய்த பொடி 1 கரண்டி அளவு (சுமார் 5 கிராம் அளவு) எடுத்து அத்துமன் 2 டம்ளர் தண்ணீர் விட்டு சிறிது இஞ்சி, பூண்டு சதைத்து சேர்த்து நன்கு காய்த்து அத்துடன் தேவைக்கு உப்பு மற்றும் மல்லிதழை சேர்த்து வடிகட்டி தினம் இருவேளை குடிக்கலாம்.

4. நோய் எதிர்ப்புசக்தி மற்றும் புற்றுநோய் தடுப்பிற்கு

முடவாட்டின் கால் கிழங்கில் விட்டமின் C சத்து, விட்டமின்  B சத்து, தாய்ப்பாலுக்கு நிகரான Lauric acid என்ற அமிலசத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் என்னும் தாவர வேதிப்பொருள்கள் நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து நோய் வராமல் உடலை பாதுகாக்கிறது. மேலும் மார்பக புற்று, நுரையீரல் புற்று, குடல்புற்று நோய்கள் வராமலும் தடுக்கிறது.

5. வலி, வீக்கத்திற்கு மேற்பூச்சு

முடவாட்டின்கால் கிழங்கின் மேல்தோலை சீவி நன்கு அரைத்து சிறிது பால் சேர்த்து கொதிக்க வைத்து வலி, வீக்கம் உள்ள இடத்தில் சிறு சூட்டுடன் பூசிவர வலி, வீக்கம் குறையும்.

6. நீரிழிவு நோய்க்கு

நீரிழிவு நோயாளர்கள் இக்கிழங்கை பயன்படுத்தி வர உடல் சோர்வு, கை கால் வலி மாறும் மற்றும் நீரிழிவு நோய்க்கும் சிறந்தது.

7. இருதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு

இக்கிழங்கு இரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. மேலும் இதிலுள்ள கால்சியம், இரும்புசத்து, மெக்னீசியம், பொட்டாசியம், நார்சத்து போன்றவைகள் இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க மறைமுகமாக உதவுகிறது.

மேலும் இரத்தம் மற்றும் உடலிலுள்ள நச்சுப்பொருள்களை அகற்றுகிறது. இதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக அமைகிறது.

8. ஆண்களுக்கான மலட்டுதன்மைக்கு

முடவாட்டின்கால் கிழங்கு தினம் சூப்பாக பயன்படுத்தி வர, ஆண்களுக்கு விந்தணு நகரும் திறன் அதிகரிக்கும், அதிக சக்தி கிடைக்கும், இதன் மூலம் ஆண்களுக்கான மலட்டுத்தன்மைக்கு இது சிறந்த ஒரு கிழங்காக அமைகிறது.

9. பிறப்பயன்கள்

  • இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர, தோல் சுருக்கம் மாறி பழபழப்பு உண்டாகும்.
  • பெண்களுக்கு பூப்பு காலத்தில் ஏற்படும் வலி மற்றும் வயிற்று பிரச்சனைகளுக்கு சிறந்தது.
  • இருமல், தொண்டைவலி, தலைவலிக்கு சிறந்தது.
  • மலச்சிக்கல், அதிக உடல் பருமன் போன்றவற்றிற்கு சிறந்தது.
  • உடல்வீக்கம், சிறுநீர் தரிப்பு, சிறுநீர் குறைவாக செல்லுதல் போன்றவற்றிற்கு சிறந்தது.
  • நரம்புதளர்ச்சி, தூக்கமின்மை போன்றவற்றிற்கு சிறந்தது.

10. கவனிக்க வேண்டியவைகள்

  1. மற்றவகை கிழங்குகள் போன்று அதிக அளவில் பயன்படுத்தக் கூடாது.
  2. அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் வாந்தி, பேதி, குமட்டல், வயிற்றுவலி உண்டாகலாம்.
  3. சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.
  4. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவ ஆலோசனையின் படி பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *