எம்.எப் தாமஸ் குறிப்பிடத்தக்க மலையாள திரைவிமர்சகர்.
கேரள திரைப்பட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். 50 வருடகாலம் மலையாள சினிமா மற்றும் திரைப்பட விமர்சகராக அவர் ஆற்றிய பங்களிப்பை கருத்திற் கொண்டு குறிப்பிடத்தகுந்த மலையாள திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணனிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்று சிறப்பு பெற்றவர்.
திரைப்படங்களின் மீதான எனது முடிவுறாத காதல்_ எம் .எப் தாமஸ்
மலையாளத்தில்: ஜே.எஸ் ஐஸ்வர்யா
தமிழில் : கிருஷ்ணகோபால்
பிரதிபலம் ஒன்றையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து ஒரு நபர் கலை ஊடகத்தில் திறம்பட இயங்குகிறார் என்பதை நினைக்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது…அவர் எவ்வாறு வாழ்கையை நகர்த்துகிறார் என்பது நம்முன் உள்ள ஒரு கேள்வி…?
திரிச்சூர் நகரத்து தேவாலயங்களில் மக்கள் வழிபாடுகள் செய்து நன்மை அடைந்துக் கொண்டிருக்கும் வேளையில் மாதா திரையரங்கில் சத்தியஜித்ரேயின் ‘அபராஜிதோ’படம் பார்த்து அழுதுக் கொண்டிருந்த சிறுவனிடம் இந்தக் கேள்விக்கு பதில் இல்லாமல் இருக்கலாம்….
ஆனால் நாற்பதாண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களின் வளர்ச்சியை நுட்பமாக உள்வாங்கிக் கொண்டு நல்லத் திரைப்படங்களின் பக்கம் நின்றுக் கொண்டு எழுதியும் சிந்தித்தும் வரும் 79 வயதுக்காரரிடமும் சரியான பதிலில்லை…
இருப்பினும் அவர் திரைப்பட விமர்சகர்களுக்கு நெருக்கமானவர்.அதன் வழியே நிறைய நண்பர்களை அடைந்திருக்கிறார்.திரைப்படம் மட்டுமே அவர் வாழ்வதற்கான சக்தியை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது .
சினிமா நிகழ்வுச் சார்ந்த பொது நிகழ்வுகளில் முன்வரிசையில் உட்காரும் அவசியம் உருவானாலும் ; அவர் வெட்கத்துடன் பின்னால் ஒரு இருக்கையில் சென்று உட்கார்ந்துக் கொள்கிறார் என்பதை அவர் நண்பர்கள் அறிவார்கள்.சிறந்த சினிமா காட்சிகள் பின்னால் இருந்து வருகின்றன என்பதனை அவர் உணர்ந்திருக்கலாம் அல்லது எளிமையும் வசீகரமும் மிகவும் ஆழமாக வேரூன்றியிருப்பதால் கூட இருக்கலாம் இதுதான் எம்.எப் தாமஸ் என்னும் ஒரு சினிமா மனிதனை நமக்கு தெளிவாக அடையாளம் காட்டுகின்றன.
இலக்கியம்தான் திருச்சூர்காரரான தாமசை திரைப்படம் பக்கம் நெருக்கமாக கொண்டு வந்துச் சேர்த்திருக்கிறது. கேசவதேவ் மற்றும் பாரப்புறத்தின் நாவல்களை தேடிப்பிடித்து வாசித்திருக்கிறார்.
தனது அம்மாவை பார்த்ததாக நினைவு இல்லாத தாமசின் இதயத்தில் அபராஜிதோ படம் கொளுந்து விட்டு எரிந்தது.தாயின் கல்லறை முன்பு நிராதரவாய் கண்ணீர் விட்டு அழும் அபு என்ற கதாபாத்திரம்தான் திரைப்படத்தின் மீதான அன்பை தீவிரமாக்கியது.
அன்று கம்யூனிஸ்ட் தலைவரான தனது தந்தையையும் ,மின்சாரவாரியத்தில் எழுத்தராக இருந்த தனது சகோதரனையும் பார்க்க வருபவர்களின் தொடர்பும் கலாச்சார செயல்பாடுகளும், பேச்சுக்களும் இலக்கியத்தின் பக்கம் திருப்பியிருக்கிறது.
படிக்கும் காலத்தில் திரைப்படங்கள் குறித்து பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதியிருக்கிறார்.1969-ல் பாஷா இன்ஸ்ட்டிடியூட்டில் ( மொழி நிறுவனத்தில்) கிடைத்தப் போது கலை இலக்கிய செயல்பாடுகளில் சற்று தொய்வு ஏற்பட்டிருக்கிறது.
கலாச்சார செயல்பாடுகளுக்கு குறைவில்லாத திருவனந்தபுரத்தில் அவர் வந்துச் சேரும்போது புதிய வாசல் திறந்தது.
கேரளத்தின் முதல் திரைப்படச் சங்கமான சாஸ்தாமங்கலத்தில் உள்ள ‘சித்திரலேகா’ அலுவலகத்தை தேடிச் செல்லும் போது அங்கே அடூர் கோபாலகிருஷ்ணனை சந்தித்ததும் அது அவருடைய வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தவை எல்லாம் வாழ்வில் வேறொரு பரிமாணம்..தாமஸ் அதிகம் சினிமாக் கட்டுரைகள் எழுதினார் . அதில் அடூரின் திரைப்படங்களை குறித்து “அடூரின்ற லோகம்” கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு புத்தகமாக வெளிவந்திருக்கின்றது.
சித்திரலேகாவின் பொது செயலாளராக நீண்டகாலம் செயல்பட்டார் என்பது வரலாறு.தாமஸ் தொடர்ந்து உலகசினிமாக் குறித்து மலையாள முன்னணி பத்திரிகைகளில் எழுதினார்.கலா கௌமுதியில் எழுதிய கட்டுரைகள் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டியவை.வணித் திரைப்படங்களின் வரவு பேரிரைச்சலாக கேட்கும் போது அதன் ஆபத்துக் குறித்தும், அபத்தங்களைக் குறித்து அவர் எழுதிய எழுத்துக்கள் பார்வையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களைப் பாதித்தன.
இந்திய பனோரமா நடுவர் மன்றத்தில் உறுப்பினராகவும் ,ஐ.எப்.எப்.கே முன் குழு உறுப்பினராகவும்,28 வது உலகத் திரைப்பட விழா முன்னோட்டக் குழு உறுப்பினராகவும் பயணித்திருக்கிறார்.
பேனர் திரைப்படச்சங்கம் _ திருவனந்தபுரம்
தாகூர் தியேட்டர் பின்புறம் லெனின் பாலவாடியில் வைத்து எம்.எப் தாமசின் தலைமையில் நடந்து வரும் பேனர் திரைப்படச் சங்கம் என்பது திரைப்பட ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் ஒரு அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநாள் நிகழ்வாக உலகத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.இந்த பேனர் திரைப்பட சங்கத்தில் இணந்து பயணித்து வருபவர்களில் ஆவணப்பட இயக்குனர் பிஜூவும் ஒருவர்.
இவர் எம்.எப் தாமசைக் பற்றி ‘நல்ல சினிமாவும் ஒரு நல்ல மனுஷயரும்’ என்ற ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார். இந்த ஆவணப்படமானது உலக சினிமாவை நேசிக்கும் மலையாள திரைப் பார்வையாளர்கள் மத்தியில் பரவலாக கவனிக்கப்பட்டது. உள்ளூர் பிரசாந் நகரில் வாழ்கிறார்.மனைவி பேபி, மகன் சந்தீப்.
நன்றி கலாகௌமுதி.. ஜீலை 2025…
Leave a Reply