இரா. அரிகரசுதன் கவிதைகள்
என்னை
நான் எப்படி எதிர்கொள்வது
எதிர்நிற்கும் மலைத்தொடர்களின்
முன்
ஒரு சிறு செடிக்குச்சி
கையிலிருக்கிறதென்று
நிமிர்ந்து நிற்கின்றேன்
கையிருப்பிலிருந்த
சின்ன பனிக்கட்டியும் உருகியபின்
ஈர மணலை
கைப்பிடி மண்ணென
இறுக்கிப் பிடித்திருக்கிறேன்
என்னை
நான் எப்படி எதிர்கொள்வது
மலையாகவும்
பனியுருக்கும் வெப்பமாகவும் இருக்கும்
அந்த என்னை
எதிர்கொள்ளும் நானின்
களைத்த தோள்களை
மகனின்
பிஞ்சு விரல்கள் தொட்டு
தடவி ஆசுவாசப்படுத்துகையில்
கையிருக்கும் சிறுகுச்சி
வளர்கிறது சிலம்பமாக
எழுந்து சுழற்றுகிறேன் படைவீச்சை
உச்சி அடித்து சுழன்று
காற்றில் எழுந்து அடித்து முன்னேறிச் செல்கிறேன்
அவ்வாறே
கையிருப்பின்
பிடிமண்
சுனையென ஊற்றெடுத்து
பரவுகையில்
நானே எனக்கொரு பிஞ்சுவிரலாக
மாறிக்கொள்கிறேன்
அவ்வாறே
அவ்வாறே
அன்பு மகனே அன்பு மகனே
நீ
உன்னை எதிர்கொள்வாய்
சுழன்றுக்கொண்டிருக்கும்
இந்த புதிய உலகில்
நம்மை
நாம் எதிர்கொள்தல்
வாழையடி வாழைதான்.
Leave a Reply