– ஓஷோ
நம் வாழ்க்கை உலகம் சம்மந்தப்பட்ட பொய்களை மட்டும் ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல. அந்தப் பொய்கள் மகிழ்ச்சிகரமாகவும், மிகவும் கவர்ச்சிகரமாகவும் இருக்கிறது. உயிரினங்களிலே மனித இனத்தைத்தான் உயர்வாகக் கடவுள் படைததிருக்கிறார் என்று மக்களிடம் சொல்லுங்கள், அவர்கள் உடனே ஏற்றுக் கொள்வார்கள். அது அவர்களின் மனத்திற்கு ஒரு பெரிய நிறைவைத் தருகிறது. ஆனால் அவர்கள் இதைப் பற்றி பறவைகளிடமும், மிருகங்களிடமும் கேட்டிருக்கிறார்களா? பறவைகளும், மிருகங்களும் நீங்கள் தான் எங்களை விட உயர்ந்தவர்கள் என்று சொல்லியிருக்கிறதா? அவைகளிடம் மக்கள் இதைப்பற்றி கேட்டிருக்கிறார்களா? அல்லது அவர்களாகவே ஒரு பக்கமாக தீர்மானித்து, மக்கள் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று முடிவெடுத்து விட்டார்களா?
ஆண்களிடம் பெண்களை விட நீங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லுங்கள். உடனே ஒப்பிக் கொண்டு விடுவார்கள், பெண்களிடம் அதைப் பற்றி கேட்க வேண்டிய அவசியம் கூட அவர்களுக்கு இருக்காது. அது ஒரு ஆணின் தன்முனைப்பை நிறைவு செய்கிறது. அதனால் அவர் அதை ஏற்றுக் கொள்கிறார். நீங்கள் இந்தியர்களைக் கேட்டால், பூமியில் வேறு எந்த நாடும் இந்தியாவை விட உயர்ந்ததும், இந்தியாவை விட நாகரிகம் கொண்ட நாடு வேறு எதுவும் இல்லை. இது புனித பூமி, இதுதான் கடவுள் பிறந்த இடம் என்பார்கள். யாருமே இது குறித்து சந்தேகமெழுப்ப மாட்டார்கள். காரணம், அது இந்தியர்களின் நான் என்கிற தன்முனைப்பை நிறைவு செய்கிறது. ஜெர்மனியில் கேழுங்கள். அங்கேயும் மக்கள் இதே போல்தான் நம்புகிறார்கள். சீனாவிலும் அதே போல்தான் நம்புகிறார்கள். ஒரு நேரம் வந்து மக்கள், பறவைகள், மிருகங்களிடம் கேட்கக் கூடிய சாத்தியமிருந்தால் அவைகள் திகைத்து போகும். மிருகங்கள் கூட தங்களை விட உயர்ந்தவர்கள் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றன.
நாம் இந்த மாதிரியான பொய்களை ஏற்றுக் கொள்கிறோம். காரணம், அது நான் என்கிற தன்முனைப்பிற்கு நிறைவைத் தருகிறது. மிருகத்திலிருந்து தான் மனிதன் வந்தான் என்று டார்வின் முதலில் சொன்ன போது, உலகமே அவரை எதிர்த்தது. அவர் சொன்னது உண்மையல்ல என்பதனால் அல்ல, ஆனால் அது தன் முனைப்பை உடனே காயப்படுத்தியது. மனிதர்கள் கடவுளின் குழந்தைகள் என்று நம்பப்படுகிறது. இந்த முட்டாள் அவர்கள் மிருகங்களின் குழந்தைகள் என்கிறான். மக்கள் கோபம் அடைந்தார்கள். அதனால் அவர்கள் கொந்தளித்தார்கள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு கலிலியோ வந்தார், இல்லை பூமிதான் சூரியனை சுற்றி வருகிறது என்றார். உலகம் முழுவதும் அவரை எதிர்த்தது. தேவாலயங்களிலிருந்த பாதிரியார்களும், சமய குருமார்களும் இது தவறு, கடவுள் தன்னைப் போலவே மனிதனைப் படைத்தார். அவர் இந்த பூமியை மையமாக வைத்து, சூரியன் பூமியைச் சுற்றி வரும்படி செய்தார். பூமி எப்படி சூரியனைச் சுற்றி வர முடியும்? மனிதன் தானே பூமியில் வாழ்கிறான். மனிதர்கள் வாழும் இந்த பூமி எப்படி சூரியனைச் சுற்றி வர முடியும்? இல்லை, சூரியன்தான் பூமியை சுற்றிவர முடியும். பிரபஞ்சத்தின் மையமே பூமிதான். அவர்களுடைய அகந்தையினால், மக்கள் பிரபஞ்சத்தின் மையம் பூமிதான் என்று மக்கள் நினைத்தார்கள். எல்லா நட்சத்திரங்களும், சூரியனும் பூமியைச் சுற்றித்தான் வருகிறது. ஆயிரக்கணக்கான வருடங்களாக யாரும் எந்த சந்தேகமும் எழுப்பவில்லை. காரணம், அது அவர்களுடைய தன்முனைப்பை காயப்படுத்தும், அது மக்களிடம் பெரிய கவலையை ஏற்படுத்திவிடும்.
Leave a Reply