திரிச்சூர்  15-வது  உலக நாடக விழா- 2025

திரிச்சூர்  15-வது  உலக நாடக விழா- 2025

  • By Magazine
  • |

– கிருஷ்ணகோபால்..

புகைப்படங்கள் கணேஷ் ராமையா

கேரளாவில் கொச்சின்  எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு, கொல்லம், கண்ணூர் உள்ளிட்ட பல நகரங்களுக்கு வரலாற்றுச்  சுற்றுலாவுக்குகென நண்பர்களோடு  பயணப்பட்டிருக்கிறேன் ஆனால் தூரத்திலிருந்து என்னை எப்போதும்  வசீகரித்துக் கொண்டிருக்கும்  திரிச்சூர் நகரத்திற்கு இது வரையிலும்  பயணப்படவில்லையே என்ற கவலையிருந்தது. திரிச்சூரில் நடந்த நாடகவிழாவுக்கு போயிற்று வந்ததிலிருந்து அந்தக் கவலை தீர்ந்தது .

 பத்து வருடத்திற்கு முன்பு நாகர்கோவில் இந்துக்கல்லூரி வளாக திறந்த  வெளி   மைதானத்தில் வைத்து  முருக பூபதியின் ‘குகைமரவாசிகள் ‘நாடகம் நிகழ்த்தப்பட்டது…அதற்கு பின்துணையாக ,பைசல்,தினகர் கிருஷ்ணகோபால்  இவர்களோடு காலம் சென்ற தங்க கிருஷ்ணன்  என இவர்கள் பொது மக்களிடம் வசூல் செய்த நிதியில் நவீன  நாடகம்  நிகழ்த்தப்பட்டது.  அந்த நாடகத்திற்கு பொது மக்களிடையே  நல்ல வரவேற்பு  இருந்தது.நவீன நாடகத்தின் உடல்மொழி எல்லோரையும் கவர்ந்தது.சினிமாவின் மூன்றாம் தரமான மலினமான வடிவத்தையே நாடகம் என்றப் பேரில் கிராமங்களில் பார்த்து வரும் மக்களுக்கு, நவீன நாடகம் என்ன பேசுகிறது.அது எவ்வாறு நடத்தப்படுகிறது .அது முன் வைக்கும் உடல்மொழி ரகசியம் என்ன என்பனவற்றை உணர வைத்தது.

முருக பூபதியின் ‘மணல் மகுடி’ ஸ்ரீரீஜிதின் ‘கட்டியக்காரி’, ஜானகியின் ‘முகமூடி’,வெளிரெங்கராஜின் ‘நாடகவெளி’  மங்கையின் ‘மரப்பாச்சி’   கருணபிரசாத்தின் ‘மூன்றாம் அரங்கு’,பகுர்தீனின்’ திணை நில வாசிகள்’ மற்றும் பிரசன்ன ராமசாமி நாடகக் குழு போன்றவை  தன்னெழுச்சியாக  தங்கள் கைப் பணத்தைச் செலவிட்டு இதுப் போன்று  முயற்சி செய்து மக்களிடையே நவீன நாடகங்களைக் கொண்டுச் சேர்த்துக் கொண்டிருக்கிறது . ஆனால்  இதைச் எடுத்துச் செய்ய வேண்டிய   திராவிட  அரசு இதற்கான எந்த முயற்சியையும் இதுவரைக்கும் எடுத்ததாகத் தெரியவில்லை.

இதுபோன்ற நவீன நாடகவிழாவிற்கு நிதி ஒதுக்கி கேரளாவில் நடத்துவதுப் போல் வருடத்திற்கொருமுறை ‘நாடக விழா ‘ நிகழ்த்துவதற்கு என்ன தடை  இருக்க முடியும் என ஆழ்ந்து யோசிக்கும் போது நாடகத்திற்கென ஒதுக்கப்படும் குறைந்த  நிதியில்  பெருமளவு ஊழல் செய்ய முடியாது என்றக் காரணத்தைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்..?நவீன நாடகம் குறித்த புரிதல் இல்லையென்று தப்பிக்க முடியாது நவீன இலக்கியவாதிகளும், கவிஞர்களும்  சட்டமன்ற   பாராளுமன்ற உறுப்பினர்களாக  நிறைந்திருக்கும் ஆட்சிக் கூடம் இது.

சமீபத்தில்  திருவனந்தபுரத்தில் மாத்ருபூமி நடத்திய  ‘கலை ’இலக்கியத் திருவிழாவிற்கு சென்றிருந்த போது அங்கு நவீன நாடகத்தின் தேய்வுக் குறித்து ஒரு விவாத  அரங்கம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.வழக்கமாக திரிச்சூர் நாடக விழாவுக்கு நிதி ஒதுக்கும் கேரள அரசு நிதியை விடுவிக்க தாமதித்ததால் நாடகவிழா ஒரு மாதம் தாமதமாக  நிகழ்த்தப்பட இருக்கிறது எனவும்;  நாடகத்திற்கு குறைந்த நிதி ஒதுக்கப்படுவதால் நவீன நாடகத்தை முன்னெடுத்து செல்வதில் ஏற்படும் தொய்வு நிலையைக் குறித்தும்  விவாதிக்கப்பட்டது.

ஆறுவருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் இந்திய  நாடக விழா  கொண்டாடப்பட்டது அந்த நிகழ்வில் இரண்டு நாள்  நண்பர்களோடு கலந்துக் கொண்டு நான்கு நாடகங்கள் பார்த்தேன். அதன் பிறகு பல வருடங்களுக்குப் பிறகு  முறையாக  திட்டமிட்டு பயணம் செய்து ஏழு நாட்கள் நடத்தப்பட்ட நாடக விழாவில் நண்பர்களோடு  இரண்டு நாட்கள்  _ மார்ச் 1 மற்றும் 2 ம் தியதிகளில் (2025)  மட்டுமே கலந்துக் கொண்டு நான்கு நாடகங்களைப் பார்த்தோம்..

அங்கு நிகழ்த்தப்பட்ட 16 நாடகங்களில் எட்டு நாடகங்கள் பெண்களால் இயக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு…

  தமிழ்நாட்டில் சங்கக் காலத்தோடு தொடர்புடைய மதுரை எப்படி தமிழ்நாட்டின் கலாச்சார நகரமோ அதுபோல் கேரளாவின் கலாச்சார நகரம் திரிச்சூர்..அங்குதான் கேரள சங்கீத நாடக அகாடமி,கேரள சாகித்ய அகாடமி; லலித் கலா அகாடமி  போன்றவற்றின்  தலைமையகம் அமைந்திருக்கிறன.

 திரிச்சூரில் வடக்கு நாதர் என்றழைக்கப்படும்  மிகவும் பழமை வாய்ந்த  சிவன் கோவில் ஒன்று சிறியக் குன்றுப் போன்ற பகுதியில்  அமைந்துள்ளது..இந்த சிவன் கோவிலைச் சுற்றிதான் இந்நகரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  எப்படி மதுரை மீனாட்சி  அம்மன் கோவில் சுற்றி  நான்கு திசையிலும் தமிழக கட்டிடக்கலையை பிரதிநிதித்துவப்படுத்தும்  ராஜகோபுரம் இருப்பதுப் போல் இங்கும் நான்கு திசையிலும் கேரள கட்டடக்கலையை வெளிக்காட்டும் கோபுரங்கள்  இருக்கின்றன.சித்திரைமாதம் பூரம் விழா கொண்டாடப்படுகிறது.  ஓணத்திற்கு அடுத்தப்படியாக ஒரு கலாச்சார விழாவாக சித்திரை மாதம்  கொண்டாடப்படும்  திரிச்சூர் பூரம் விழாவாகும்.

திரிச்சூரில் இன்னொரு வரலாற்றுச்  சிறப்பு மிக்க இடம்தான் ‘புத்தம் பள்ளி தேவாலயம்’ இந்தியாவிலேயே உயரமான தேவாலய கோபுரம் இது .இதன் உச்சிக்குச் செல்ல லிப்ட் வசதி செய்யப்பட்டிருக்கிறது.அங்கிருந்துப்  பார்த்தால் திரிசூர் நகரம் மொத்தமும் நாம் பார்த்து பரவசமடையலாம்.அங்கு பல ஒவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.அதில் தென்னிந்தியாவைச் சார்ந்த முக்கியமான ஓவியர்களின்  படைப்புகள் பல இருந்தன.வரையப்பட்டிருந்த  ஓவியங்களில் என்னை கவர்ந்தது சிரிக்கும் சீசஸ். இவ்வாறான வரலாற்று சிறப்பு மிக்க இடத்தில் நாடக விழா நடத்தப்பட்டிருப்பென்பது பொருத்தமானதே…

நான் பார்த்த நாடகங்கள்..

நெய்த்து.  (மலையாளநாடகம்)

மலையாள நடிகை ரீமா கல்லீங்கல் இயக்கத்தில் உருவான நாடகம்’ நெய்த்து ‘.மாமாங்கம் எனும்  நாட்டியக் கலைக்குழுவின் படைப்பு இது.2018 ல் கேரளாவில் நடந்த வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட நெசவுக் கூடத்தை  ஞாபத்தில் கொண்டு அந்த தொழிலை  புணரமைக்கும்   விதத்தில் இந்நாட்டிய நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது.

நெசவுசெய்யும் போது  தொழிலாளியிடமிருந்து எழும்பும் சின்னச் சின்ன ஓசையையும்  பின்னணியிசையாக மாற்றப்பட்டிருக்கிறது.

நூலில் சாயம்முக்கி நெய்து  ஒரு ஆடையாக உருமாறும் வரையிலும் ஒரு நெசவு தொழிலாளியின் உடல்மொழி நாடகத்தில் கலையாக பரிணமித்திருக்கிறது.

 உரையாடல் இல்லாமல் நடனம் மற்றும் இசையின் வழியே கதைச் சொல்லும் எட்டுபேரின் உடல்மொழிக்கு ஒளியமைப்பு வழியே ஒரு கவித்துவ அழகு கொடுத்தது சிறப்பு…நாடகம் இறுதிக் காட்சியில் நூல் ஒரு பிரமாண்ட ஆடையாக உருமாறும் காட்சிப்படிமம் சிலிர்ப்பை உருவாக்கியது.

டியர் சில்ரன் சின்சியர்லி…

இது சிங்கள அரசியல் நாடகம்..சிங்களம்’

தமிழ்,மற்றும் ஆங்கிலமொழியில் உரையாடல் அமைந்திருந்தது.

ஏழு காட்சிகள்…

ஏழு காட்சிகளும் ஏழு தனித்துவமிக்க வடிவங்களில் சிங்கள அரசியலின் எழுபதாண்டுகால வரலாறு.ஒவ்வொரு பத்தாண்டின் முக்கியமான பிரச்சனை ஒரு காட்சியாக உருமாற்றம் பெற்றன…1940 தொடங்கி  2000 வரைக்குமான காலகட்டம் நாடகத்தில் பதிவாகியிருந்தது.

இலங்கை  சுதந்திரமடைந்ததும்  தமிழ் சிறுபான்மை இனமாகி போனது. மறுக்கப்பட்ட உரிமைக்கான  சத்தியாகிரக போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள்  கொல்லப்படுகிறார்கள். பின் தோன்றும் சிங்கள தமிழ் மோதல் போக்கு..

அரசியலில் பௌத்தம் செல்வாக்கு பெறுதல்.இரு இனங்களுக்குள்ளும் தோன்றும் மோதல் போக்கு கலவரமாக மாறி  போராக விரிவடையும் அரசியல் சரித்திரத்தைக் குறித்து  நாடகம் ஒரு நியாயமான  கவன ஈர்ப்பை உருவாக்கியது.

எப்போதுமே நவீன நாடகத்தில் நடிகர்களின்  உடல்மொழி என்பது எப்போதுமே ஒரு தனித்துவமிக்கவை…

இசையும் ஒளியமைப்பும் அர்த்ததோடு பயன்படுத்தப்பட்டிருந்தன.

மும்பையை இயங்கு தளமாகக் கொண்ட தமாசா நாடகக்குழுவினரின் நாடகம் இது.

பெரும்பாலும் இந்தி மொழி உரையாடல் புரிந்துக் கொள்வதற்கு சிரமமாக இருப்பினும் .சமகால அரசியல்,கருத்தியல், மோதல்,  ஓரே பாலின உறவுக்கு எதிராக  சமூகம் பார்க்கும் பார்வையை  பகடிச் செய்வது, வரலாறு என எல்லாவற்றையும் பகடிச்செய்கிறதென்பதை நடிகர்களின் உடல் மொழிவழியே உணர்ந்துக் கொள்ள முடிந்தது.80 நிமிடங்கள் கொண்ட நாடகம்  முழுக்க பகடி உரையாடலைக் கொண்டது.

 ஈராக் நாட்டைச் சார்ந்த 60 நிமிடங்கள் நிகழும்  நாடகமிது..

ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டே கதாபாத்திரங்கள்.உரையாடல் அரபிமொழியில்…பக்கவாட்டுத் திரையில் ஆங்கில துணைத்தலைப்பில் உரையாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது…

அது ஒரு போர் சூழல்  .. ஹெலிஹாப்டர் வானில் வட்டமிட்டுக் கொண்டிருப்பதும் .இடையிடையே வெடிகுண்டு வீசப்படுவதும் பின்னணி இசைவழியே உணர்ந்துக் கொள்ள முடியும்…

சிதலமடைந்துப் போன வீட்டில் கணவன் மனைவிகளுக்கிடையே தர்க்கம்…ஆண் ஒரு கவிஞன்.தன் தந்தையை போர் சூழலில் இழந்தவன்.இந்த சூழலில் அவர்களுக்கு குழந்தை வேண்டுமா வேண்டாமா. என்பதுதான் தர்க்கத்தின் மூலக்காரணம்..

இருவரின் உயிரோட்டமான நடிப்பு பார்வையாளர்களுக்கிடையே ஒரு பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது..பலபேர் வீட்டில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நிகழும் சண்டையோடு அந்த நாடக நிகழ்வைப் பொருத்திப் பார்க்கும் சாத்தியங்களை உள்ளடக்கிய அரங்கமைப்பு….

இந்நாடக நிகழ்வுக்கு தமிழ்நாட்டிலிருந்து பலர் வந்திருந்தனர்.பிரபாகர் வேதமாணிக்கம்,நவீன நாடக நடிகை ஆஷா அவர் மகன் நிலன் மற்றும்  இலக்கிய ஆர்வலர் சாலினி என இன்னும் பலர் வந்திருந்தனர்.ஒவ்வொரு நாடகத்திற்கும் டிக்கெட் உண்டு.டிக்கெட் விலை மிகவும் குறைவு . தோப்பில் பிளாக் பாக்ஸ், கே.டி முகமது ரீஜினல் தியேட்டர், ஆக்டர் முரளி தியேட்டர் என மூன்று அரங்கங்களில் நாடகங்கள்  நடத்தப்பட்டன.

நாடகத்திற்கு வெளியே நாடகக் கலைஞர்களோடு உரையாடல் மற்றும் விவாதங்களை நிகழ்த்த இராம நிலையம் காம்பஸ் ஒழுங்குச் செய்யப்பட்டிருந்தது.இரவு கலைநிகழ்ச்சிகள்.மெல்லிசை பாடல்கள்,கசல்,நாட்டுப்புற நாட்டியம் என ஒவ்வொரு நாள் இரவு ஒன்பது மணிக்கும் கலை இரவு கே.எஸ் .என்.ஏ பிரண்ட் யாட் திறந்தவெளி அரங்கில்  நிகழ்த்தப்பட்டது. முதல் நாள் இரவு நாடகம் முடிந்ததும் .’சரத்’எனும் இசையமைப்பாளரின் ‘ சரத்ராத் ‘மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது.நண்பர்கள் நிகழ்ச்சியை கண்டு விட்டு  பாதியில் கிளம்ப இருந்தார்கள் .நான்  முழுதும்  பார்த்து விட்டு வருகிறேன் என நண்பர்களிடம் சொல்லி விட்டு உட்கார்ந்து விட்டேன்.  சற்று சலிப்புத் தட்டும் போது நானும் அங்கிருந்து கிளம்ப தயாரானேன் .நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கும் நாடகம்  நடக்கும் இடத்திற்கும் இரண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.ஆட்டோவில் சென்று விடலாம்தான் தமிழ்நாட்டைப் போல் கொள்ளையடிப்பு இல்லை.முப்பது ரூபாய் கட்டணத்தில் தங்கும் விடுதிக்கு சென்று விடலாம் ஆனால் நான் அந்த நகரத்தின் இரவு எப்படியிருக்கும் என  தனிமையில் நடந்துச் சென்று அறிய ஆவலுற்று  அங்கிருந்து  தங்கும் விடுதிக்கு  நடந்துச் சென்றேன்….எல்லா நகரங்களைப் போலதான் இங்கேயும்  சட்டர் தாழ்த்தி பூட்டிக் கிடக்கும் கடைகளின் முன்னால் வீடற்ற ஏழைகள்; பிச்சைக்காரர்கள்; ஊனமுற்றோர்கள் என ஒரு கூட்டம் மனிதர்கள் படுக்கையை தயார்படுத்தி தூங்க ஆயத்தமாகிக் கொண்டக் காட்சியை கண்டுக் கொண்டே  குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதியை வந்தடைந்தேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *