வெள்ளையரை எதிர்த்து போராடிய வீரமங்கை கிட்டூர்ராணி சென்னம்மா

வெள்ளையரை எதிர்த்து போராடிய வீரமங்கை கிட்டூர்ராணி சென்னம்மா

  • By Magazine
  • |

பேராசிரியர். முளங்குழி.பா.லாசர்

தமிழ்நாட்டில் வீரமங்கை வேலுநாச்சியார் போல் கர்நாடகாவில் மக்களால் போற்றி புகழப்படுபவர் வீரமங்கை கிட்டூர்ராணி சென்னம்மா.  1778- ஆம் ஆண்டு கர்நாடக மாநில கிட்டூர் காகத்தி நகரில், தூலப்பக்கவுண்டர் தேசாய் மகளாகப் பிறந்தார். கிட்டூர் சமஸ்தான மன்னர் முல்லை சர்ஜா சென்னம்மாவை மணம் புரிந்து கொண்டார். 1812-ஆம் ஆண்டு மன்னர் முல்லை சர்ஜா மரணமடைய பின்னர் ஒரே மகனும் இறந்து விட்டான்.

ராணி சென்னம்மா சிவலிங்கப்பாவை வளர்ப்பு மகனாக்கி மன்னனாக முடி சூட்டி, ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினார். சினமடைந்த ஆங்கிலேயர், ராணி சென்னம்மாவின் சுவீகாரம் ஏற்கத்தக்கதல்ல. சிவலிங்கப்பாவை நாடு கடத்த வேண்டுமென்றனர். ராணி மறுத்தார். கிட்டூர் அரண்மனையின் கருவூலத்தைப் பூட்டி முத்திரை வைத்து விட்டுச் சென்றனர்.

கிட்டூர் ராணி சென்னம்மா மக்களிடம் சென்று முறையிட்டார். மக்கள் அவருக்கு முழு ஆதரவு அளித்தனர். அவருடன் சேர்ந்து போரிடத் தயாராயினர். வெள்ளையர் கிட்டூர் மக்களைப் பிளவுபடுத்த முயன்றனர். முயற்சியில் தோல்வியைத் தழுவினர்.

சென்னம்மா பக்கத்து சமஸ்தானங்களில் எல்லாம் உதவி கோரினார். வெள்ளையருக்கு பயந்து ஒருவர் கூட உதவி செய்ய முன்வரவில்லை. இளமைப்பருவத்தில் குதிரையேற்றம், வாள்சண்டை, அம்பு எய்தல் போன்ற அனைத்துப் போர்க்கலைகளையும் கற்ற சென்னம்மா தைரியமாக வெள்ளையரை எதிர்த்து நின்றார். தகுந்த பயிற்சி அளித்து ராணுவத்தை விரிவுபடுத்தினார். நவீன போர்க்கருவிகள் வாங்கிக் குவித்து வைத்தார். சங்கொல்லி ராயண்ணா என்ற மாபெரும் வீரனைத் தளபதியாக்கினார்.

கிட்டூர் ராணி சென்னம்மாவின் மகன் சிவலிங்கப்பாவைக் கைது செய்ய, வெள்ளையர் படை ஆங்கிலப்படைத் தளபதி ஜாண் தாக்கரே தலைமையில் அணிவகுத்து வந்தது. கிட்டூர் கோட்டையை முற்றுகையிட்டது. ஆவேசமடைந்த கிட்டூர் மக்கள் கையில் கிடைத்த ஆயுதங்களுடன் ஆங்கிலப்படையைச் சுற்றி வளைத்து நின்றனர்.

வெள்ளையர் படை கிட்டூர்  கோட்டையை உடைக்க முயன்ற போது, ராணி சென்னம்மா திடீரென கோட்டையைத் திறந்து கொண்டு குதிரையில் மின்னல் வேகத்தில் வெளிப்பட்டார். ஆயுதங்களை கீழே வைத்து ஓய்விலிருந்த வெள்ளையர் படை முற்றிலுமாக அழிக்கப்பட்டது. படைத்தளபதி ஜாண்தாக்கரே கொல்லப்பட்டார். ஆங்கில வீரர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

இரண்டு மாதங்களுக்குப்பின், ஆங்கிலேயரின் மாபெரும் படையொன்று மேஜர் சாப்ளின் தலைமையில் வந்து கிட்டூரைத் தாக்கியது. சென்னம்மா களத்தில் நின்று கடும் போர் புரிந்தார். கடுமையான சண்டையில் இரு தரப்பிலும் பலர் மாண்டனர். வெள்ளையரின் மாபெரும் படையினைக் கண்டும் சென்னம்மா அஞ்சாது போரிட்டார்.

சென்னை, தார்வார், பெல்காம், ஆர்க்காடு, பெங்களூர், பெல்லாரி ஆகிய எல்லா இடங்களிலிருந்தும் பெரும் படைகள் நவீன ஆயுதங்களுடன் வந்து ஆங்கிலேயருடன் சேர்ந்து கொண்டு கடுமையாகப் போராடியது. பல முனைகளிலிருந்தும் ஆங்கிலப்படை தாக்கியதால் சென்னம்மாவால் தாக்கு பிடிக்க இயலவில்லை. போரில் தோல்வியுற்றார். ஆங்கிலப்படையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சிறைச்சாலையிலேயே வீரமங்கை கிட்டூர் ராணி சென்னம்மா மரணத்தைத் தழுவினார்.

கர்நாடகாவின் மாபெரும் வீராங்கனை கிட்டூர்ராணி சென்னம்மா இன்றும் போற்றப்படுகிறார். இந்திய நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பெங்களூர், பெல்காம், கிட்டூர் ஆகிய முக்கிய நகரங்களிலும் அவரது முழு உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்திய நாட்டு அரசு 1977- ஆம் ஆண்டு சென்னமாவுக்கு சிறப்பு தபால்தலை வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியது. இந்திய நாட்டு விடுதலை வேள்வியில் நாட்டுக்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரமங்கை கிட்டூர் ராணி சென்னம்மா புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *