பழனி அரங்கசாமி
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத் திட்டங்களும், வரவு செலவினங்களும் அந்தந்த மாநில முதல்வரின் இசைவோடு தான் நடைமுறைக்கு வருகின்றன. டில்லி மாநிலத்தை ஆளுகை புரிந்த ஆம் ஆத்மி அரசு சென்ற முறை தேர்தல் வந்தபோது, தலைநகரில் உள்ள ஏழைப் பெண்டிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவித்தது. இது தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் விதத்தை என்று கூறிய பி.ஜே.பி கட்சி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2500 ரூபாய் ஏழை மகளிருக்கு அன்பளிப்பாக கொடுப்போம் என்று எதிர்ப்பிரச்சாரம் செய்தது.
இந்த இரண்டு கட்சிகளும் இப்படித் தேர்தல் பிரச்சாரம் செய்த போது, காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் பெண்டிருக்கு ரூபாய் 2500/- கொடுப்பதோடு, நூறு யூனிட் இலவச மின்சாரம், சமையல் எரிவாயு 500 ரூபாய் மலிவு விலையில் ரூபாய்
இருபத்தைந்து லட்சம் வரை இலவச சுகாதாரக் காப்பீடு போன்ற உதவிகளை அறிவித்தது. அரசு கட்டிலில் ஏறும் கரை கடந்த ஆர்வத்தால் இப்படிக் காட்சிகள் அனைத்து வாக்குறுதிகளையும் அள்ளி வீசுகின்றன.
இந்திய நாட்டில் ஏறத்தாழ பதினொரு மாநிலங்களில் இலவசமாகப் பணமும் பொருளும் கொடுப்பதை கொள்கை ரீதியாகவே செயல்படுத்தி வருகின்றனர். கட்சியாலும், கொள்கையாலும் வேறுபட்ட பற்பல மாநிலங்களும் கூட இலவசங்களின் செலவு பற்றிக் கவலைபடாமல் இலவசம் கொடுப்பது பற்றியே திட்டமிடுகின்றனர்.
ஆக்சிஸ் வங்கியினர் தரும் புள்ளி விவரப்படி இதுவரை ஏறத்தாழ 13 லட்சத்து 40 ஆயிரம் பெண்டிர் இந்தியாவில் இலவச திட்டங்களினால் பயன் அடைந்துள்ளனர். சில மாநிலங்களில் ஒட்டுமொத்தச் செலவினத்தில் ஐந்து சதவீதம் இலவசங்களுக்கு என்று ஒதுக்கி விடுகின்றனர்.
இந்த இலவசங்கள் பெண்களுக்கு மட்டும் தான் என்பதில்லை. ஆடவர்க்கும் உண்டு. தெலுங்கானாவிலும் ஒரிசாவிலும் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஊக்கத்தொகை என்னும் பெயரில் சிறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4000/- கொடுத்துள்ளனர். அவர்களது ஆதார் அட்டைகளை வைத்து வங்கிக்கணக்கில் அத்தொகை செலுத்தப் பெறுகிறது. வளமாக இருந்த தஞ்சை, திருச்சி போன்ற மாவட்டங்களில் வானம் பொய்த்த காலத்திலும், கர்நாடகத்தில் மிகுதியான நதி நீர்ப்பயன்பாட்டினால் காவிரியின் நீர்வரத்து குறைந்து போன போதும், வேளாண் மக்களுக்கு ஏக்கருக்கு நாலாயிரம் என்று உதவித்தொகை கொடுக்கின்றனர். இலவசங்கள் கொடுக்கச் சற்று தாமதமான காரணத்தால், மராட்டிய மாநிலத் தேர்தல் தேதிகளைக் கூட அங்கு கொஞ்ச காலம் தள்ளி வைத்தார்கள். அந்த மாநிலத்தில் கிராமப்புற கால்நடைப் பாதுகாப்புக்கென்று, முதிர்ந்த பசு ஒவ்வொன்றுக்கும் 50 ரூபாய் ரொக்கத் தொகை கொடுக்கப் பெற்றது.
அரசுகள் தமது பொதுப்பணத்தை மாநில வளர்ச்சிப் பணிகளுக்காகவும், வேலை வாய்ப்பினை உருவாக்கி தொழில் ரீதியான வருமானங்களுக்காகவும் செலவிட வேண்டுமேயொழிய அதனைத் தேர்தலோடு இணைத்து இலவசங்களைக் கொடுப்பது எந்த வகையிலும் நியாயமாகத் தெரியவில்லை என்பதை நீதிமன்றங்களே கூறுகின்றன. பற்பல கட்சிகள் உள்ள நம் நாட்டில் ஒவ்வொரு கட்சியும் இலவசங்களை நாற்காலி பிடிக்கும் உத்தியாக்குவது நாகரிகமான அரசியலாகவும் தெரியவில்லை. பல்வேறு கட்சிகளின் பதவிக்கான அரசியல் போட்டியில் மக்கட் சமுதாயத்துக்கு முக்கியமானதும், நாட்டு முன்னேற்றத்துக்குமான பெருந்தொகைகள் இலவசங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் நாட்டின் அடிப்படை வளர்ச்சியான கல்விக்கும், மக்கள் நலத்திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கப்பெறுவதில்லை என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவப்பணி இடங்களும் பல்லாயிரக்கணக்கான பள்ளிகளிலும், அரசுக் கல்லூரிகளிலும் உள்ள ஆசிரியப்பணி இடங்களும் நிரப்பப்படவில்லை என்னும் கூக்குரல் அவ்வப்போது எழுகின்றது. அரசின் பணி மக்கள் நலத்திலும், மருத்துவத்திலும், கல்வியிலும் குறைபடுவதனால், இவற்றைத்தரமாக மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் தழைத்தோங்கி வளர்கின்றன. ஆனால் இவற்றின் இமாலயக் கட்டணத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஏழைமக்கள் தான் தவிர்க்கிறார்கள்.
தேர்தல் இலவசங்களால் மக்கள் உழைக்க விரும்பவில்லை என்று டில்லியில் உள்ள உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. நாமும் சமுதாயத்தின் ஒரு பங்கினர். எனவே நம்மால் இயன்ற அளவு உழைத்துப் பொருளீட்ட வேண்டும் என்கிற விழிப்புணர்வை உண்டு பண்ணுவதோடு, உழைப்புக்கும், தொழிலுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டுமேயெழிய மரக்கிளையில் வளரும் புல்லுருவியைப் போல இலவசமாக ரொக்கப் பணம் வாங்கும் சோம்பேறிகளாக வளர்க்கக் கூடாது என்கிறது நீதிமன்றம்.
உச்சநீதிமன்ற நீதியரசர் கவாய் அவர்கள் தங்களது மராட்டிய மாநிலத்தில் பேரவைத் தேர்தலுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இலவசங்களால் வேளாண் பணிக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. இலவச ரேஷனில் உணவுப்பொருள் கிடைப்பதால், மக்கள் உழைக்க விரும்புவதில்லை என்றும் கூறியுள்ளார். இலவசப் பணப்பரிமாற்றம், ஊக்கத்தொகை முதலியவற்றால் ஒட்டுமொத்த நிதிநிலைமை சரிந்து வருகிறது என்று மராட்டிய மாநில கூட்டுறவு வங்கி அறிவித்துள்ளது.
காலம் முழுவதும் நிரந்தர குடிகாரன்களாக இருந்து மரணம் அடைவோருக்கும், அங்கும் இங்கும் பரம்பரை விரோத உணர்வால் கொலை செய்யப்பட்டோருக்கும் அரசினர் லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுப்பதை நிரந்தரமாகச் செய்து கொண்டிருக்க முடியுமா என்கிற கேள்விகளும் எழாமல் இல்லை.
இத்தகைய செலவினத்தைப்பற்றி சிந்திக்கும் போதே அந்தத் தொகை வேலை வாய்ப்பினை உறுதி செய்யுமா, பிற துறைகளின் இன்றியமையாச் செலவினங்களுக்கு இடைஞ்சலும் தடையுமாக இருக்குமா என்பதையெல்லாம் அரசினர் எண்ணிப் பார்க்க வேண்டுமென டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் டாக்டர் கிமின்ஷா கூறுகின்றார்.
நகர்ப்புறத்தில் வாழும், மத்திய தர வர்க்கத்தினரும் மேலதிகாரிகளும், செல்வந்தர்களும், தொழில் அதிபர்களுமே வருமானவரி செலுத்துவேராக உள்ளனர். நாட்டின் கண்மூடித்தனமான இத்தகைய இலவசங்களால் ஏற்படும் நெருக்கடியினால், அரசினர் வரியை உயர்த்த நேரிடும். இந்தப் பின்னடைவு மறைமுகமாகத் தங்கள் தலையிலும் விழுகிறதே என்று வரி செலுத்துவோர் வருந்துகின்றனர்.
ஆனாலும் இலவச ரேஷன் அரிசி போன்ற திட்டங்களால் பட்டினி சாவுகள் தடுக்கப்படுகின்றன. இலவச பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவதன் மூலம் ஏழைகளும் பொங்கல் கொண்டாட வழி பிறக்கிறது என்றாலும் வெறும் இலவசங்களைப் பெற்று கொண்டிருப்பவர்களாக மக்களை மாற்றாமல் அந்த இலவசங்களைக் கொண்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் விதமாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
Leave a Reply