குடும்ப சொத்துக்கு பதிலாக வித்தையை கற்றுத்தந்தார் எனது தந்தை

குடும்ப சொத்துக்கு பதிலாக வித்தையை கற்றுத்தந்தார் எனது தந்தை

  • By Magazine
  • |

ஆசான் யோனா பேட்டி…

குடும்ப சொத்துக்கு பதிலாக  வைத்தியம், வர்மம் மற்றும் களரி போன்ற கலைகளை எனக்கு கற்றுத் தந்தார் எனது தந்தை என்று பெருமையுடன் கூறுகிறார் கன்னியாகுமரி மாவட்டம் மேல்பாலை என்ற பகுதியை சேர்ந்த ஆசான் யோனா

                புதிய தென்றலுக்காக அவரது வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தோம். மிகவும் எளிமையுடனும் அன்புடனும் உபசரித்து அமர வைத்தார். மேலும் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

எனது பெயர் யோனா. எனது தந்தையின் பெயர் டேனியல் ஆகும் . எனக்கு வயது 90 ஆகிறது. எனது அம்மா எனது சிறு வயதிலேயே இறந்து விட்டார்.

                எனவே எனது அப்பா இரண்டாவதாக எனது சித்தியை திருமணம் செய்து கொண்டார். அதன் மூலம் எனக்கு மூன்று தம்பிகள் மற்றும் ஒரு தங்கை என நான்கு சகோதரர்கள் இருந்தனர். அந்த காலத்தில் கடும் பஞ்சம் நிலவியதால் நானும் எனது தந்தையும் பனைமரம் ஏறும் தொழிலை செய்து வந்தோம். எனது சகோதரர்களை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்து கொள்ளவில்லை.

தாங்கள் ஆசான் ஆனது எப்படி யாரிடம் இந்த கலைகளை கற்றுக் கொண்டீர்கள்

                எனது தந்தை ஒரு ஆசான் ஆவார்.. அவர் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அனந்த பத்மநாபன் ஆசான் என்பவரிடம் வர்மம், வைத்தியம் மற்றும் களரி ஆகியவற்றை ஏற்கனவே கற்றிருந்தார். ஆகவே பனைமரம் ஏறும் நேரம் போக மீதமுள்ள நேரங்களில் வைத்தியம்  செய்வதற்காக எனது தந்தை பல இடங்களுக்கும் செல்வது வழக்கம்.

                எனது இருபதாவது வயது முதல் எனது தந்தை வைத்தியம் செய்ய செல்லும் போது என்னையும் உடன் அழைத்துச் செல்வார்.

எங்களுக்கு சொந்தமாக கொஞ்சம் சொத்துக்கள் தான் இருந்தன. எனவே அவற்றை எனது சகோதரர்களுக்கு  தந்தை பிரித்துக் கொடுத்தார். எனக்கு தருவதந்கு சொத்து இல்லை.

ஆகவே என்னிடம் எனது உனக்கு தருவதற்கு சொத்துக்கள் இல்லை. அதற்கு பதிலாக நான் கற்று வைத்திருக்கும் வர்மம் வைத்தியம் போன்ற வித்தைகளை கற்றுத் தருகிறேன். அதன் மூலம் நீ இருக்கும் இடத்திற்கு தேடி வந்து பணம் தருவார்கள்.   நீ பிழைத்துக் கொள்ளலாம் மேலும் நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் என்று கூறி வைத்தியம் வர்மம் போன்ற கலைகளை கற்று தந்தார் எனது தந்தை.

தங்களது சிகிச்சை முறையில் எந்தெந்த பழங்கால ஏடுகளை முக்கியமாக பயன்படுத்தி இருக்கிறீர்கள்

                வைத்தியம் வர்மம் போன்ற முறைகளில் எண்ணற்ற ஏடுகள் உள்ளன. அவற்றில் பல பெயர்கள் எனக்கு மறந்து விட்டன. என்றாலும் அகத்தியர் திறவுகோல், வர்ம அளவு நூல் , வர்ம பீரங்கி திறவுகோல் , வர்ம கண்டி, ஆகியவை நாங்கள் முக்கியமாக பயன்படுத்திய ஏடுகள் ஆகும்.

தாங்கள் இப்போது வைத்தியம் செய்து வருகிறீர்களா?

                ஒரு காலத்தில் யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் வைத்தியர்களை தேடி வருவார்கள் ஆனால் இப்போது முன்பு போல் யாரும் வைத்தியர்களை தேடி வருவதில்லை. சிறு பிரச்சனை என்றாலும் பெரிய மருத்துவமனைகளுக்கு சென்று விடுகின்றனர். என்னிடம் சிலர் வைத்தியம் பார்க்க வருவதுண்டு. ஆனால் எனது முதுமை காரணமாக வைத்தியம் செய்வதை நிறுத்தி விட்டேன்.

இந்தக் கலைகளை யாருக்காவது கற்றுக் கொடுத்து வருகிறீர்களா?

 இது எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்கக்கூடிய சாதாரண கலை இல்லை. சீடன் என்று  12 வருடம் காத்தால் தான் இந்த கலைகளை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறி உள்ளனர். மட்டுமல்ல இப்போது இந்த கலைகளை கற்றுக் கொள்வதற்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.

                இவற்றை நல்ல வழியில் எப்படி நோய்களை தீர்ப்பதற்கு பயன்படுத்த  முடியுமோ அதே போல் தீய வழிகளிலும் பயன்படுத்த முடியும்  என்பதாலும் எனது முதுமை காரணமாகவும் யாருக்கும்  கற்றுக் கொடுப்பதை  இப்போது நிறுத்தி விட்டேன்  என்றார் அவர்.  90 வயதை எட்டும் அவர் நூறாவது வயதை தாண்டி வாழ வேண்டும் என்று வாழ்த்தி விடை பெற்றோம்.   

பேட்டி கண்டவர்

ஜி. ஜெயகர்ணன்,

இணை ஆசிரியர், உதவி : திரு.R.அஜோய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *