செங்கோல் அரசு!

  • By Magazine
  • |

கே.பி. பத்மநாபன்

உயர்வான உழவரையே போற்றி நாட்டின்

                உறுபசியைப் போக்குதற்கே முயல வேண்டும்;

அயராதிங்(கு) உழைக்கின்ற பாட்டாளிக்கும்

                அனைத்துநல மேன்மையெலாம் கிட்ட வேண்டும்;

இயலாத ஏழைக்கும் ஊணுடுக்கை

                எல்லாமே எந்நாளும் ஈதல் வேண்டும்;

வயதான காலத்தில் வாட்டமின்றி

                வாழுவகை செய்யும் நல்திட்டம் வேண்டும்.!

சுயமாகத் தொழில் செய்யும் இளைஞர்க்கெல்லாம்

                சோர்வின்றி அரசிங்கே உதவ வேண்டும்;

புயவலியால் மாற்றாரை அடிமை செய்யும்

                போக்கினரை அடக்கித்தான் ஆக வேண்டும்;

இயன்றவரை தாய்மொழியில் கற்பித்தற்கே

                ஏற்றபல சட்டமமுல் படுத்த வேண்டும்;

அயல்தேடி இளைஞரெலாம் போகா வண்ணம்

                அனைவருக்கும் பணி உறுதி செய்தல் வேண்டும்!

மயலீயும் மதுவினையே ஒழித்துக்கட்டி

                மக்கள்தம் உடல்நலனைப் பேண வேண்டும்;

பயமின்றி வீதியிலே எந்நேரத்துக்கும்

                பாவையர்கள் பயணிக்கும் காவல் வேண்டும்;

நயவஞ்சகம் செய்தே நிதிகுவிக்கும்

                நச்சுமனத்தோரை சிறையடைக்க வேண்டும்;

செயலாக இவைதம்மைச் செய்யும் ஆட்சி                

செங்கோன்மை சிறப்புடைத்த அரசே அன்றோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *