– வழக்கறிஞர் பி. விஜயகுமார்
ஜாதி மாறுவதற்கு சட்டத்தில் இடம் உண்டுமா?
ஜாதி என்பது ஒருவருக்கு மேல் இருக்கும் சமுதாய அடையாளமேத் தவிர எவருடைய உடலிலும் அடையாளப்படுத்தியிருக்கும் ஜாதியின் மரபணு கிடையாது. ஆதலால் விஞ்ஞானத்தில் ஜாதிக்கு இடமில்லை. புளியமரத்தை நாம் பனைமரம் என்று கூப்பிட்டாலும் அதற்கு ஒன்றும் தெரியாது. அது அப்படியே பூமியில் நின்று கொண்டுதான் இருக்கும். இவைகளுக்கு வெளியிலிருந்து அவைகளுக்குத் தெரியாமலேயே நாம் ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறோம் அவ்வளவு தான். இதே போன்று தான் நமக்குக் கொடுத்திருக்கும் அடையாளம் நமது உடலுக்குத் தெரியாது. ஜாதியைப் பொருட்படுத்தாமல் நமது உடல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். தமது வேலையை செய்து கொண்டு தான் இருக்கும்.
வெல்லூரைச் சேர்ந்த ஒரு பெண் வழக்கறிஞர் ஏற்கனவே அவர் உயர் வகுப்பைச் சார்ந்திருந்தாலும், தனக்குத்தான் எந்த ஒரு இடஒதுக்கீடு சலுகையும் இல்லையே பிறகு ஏன் நான் ஜாதி அடையாளத்தோடு வாழ வேண்டுமென்று கருதி தமக்கு ஜாதி கிடையாது என்ற ஜாதியில்லாச் சான்றிதளைப் பெற்றார். இது போன்று இன்னும் இதர பிற்படுத்தப்பட்டோரும் நிறைய பேர் ஜாதியில்லாச் சான்றிதள் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது. சமுதாயத்தில் உயர்ஜாதி அந்தஸ்தைப் பெறுகின்றனர். இத்தகையவரும் நாளுக்கு நாள் பெருகி அவர்களுக்குள் பெண் கொடுக்கல் வாங்கல் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இவர்களும் இப்போது ஒரு ஜாதியில்லா ஜாதி என்ற அடையாளத்தைப் பெறுகின்றனர். ஆதலால் ஏதோ ஒரு ரூபத்தில் சமுதாயத்தில் ஜாதி அடையாளம் வந்து விடுகிறது.
தத்துவஞானி கிருஷ்ணமூர்த்தி கூறியது போல் நாம் ஒவ்வொருவரும் பாதுகாப்பை பிரிவினையின் மூலம் தேடுகிறோம் என்பது உறுதியாகிறது. இவ்வுலக மக்கள் அனைவரையும் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே ஜாதி, ஒரே கலாச்சாரம், ஒரே மொழியின் கீழ் கொண்டு வர முடியாது. பூமி எத்தனையோ நாடுகளாக பிரிந்து கிடக்கிறது. ஆனால் பூமி ஒன்று தான். பாதுகாப்பின் பொருட்டே இவ்வுலகம் நாடுகள், மதங்கள், மொழிகள், ஜாதிகள், மாநிலம், மாவட்டம், வட்டம், ஊர் என பிரிந்து இருக்கிறது.
ஜாதிகள் ஒழியாது என்றாலும் எல்லா ஜாதியினரையும் உயர்ந்த ஜாதியினர் என அரசால் அறிவிக்க முடியும். அப்படி என்றால் அன்றே இட ஒதுக்கீடு அடிபட்டு திறமை முன்னுரிமை பெறும். இதற்கு எந்த ஜாதியினர் தான் ஒத்துக் கொள்வார்கள்? ஜாதியில்லை, ஜாதியில்லை என்று வாய்கிழிய பேசுபவர்கள் தான் ஜாதியை அழிப்பதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவிப்பர். எல்லோரும் உயர் ஜாதியினர் என்றும், இனிமேல் பொருளாதார அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசு ஒரு ஜி.ஓ கொண்டு வரட்டும் பார்ப்போம். இதை எதிர்த்து ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறுபவர் பொங்கி எழுந்து விடுவார்கள். ஆதலால் நேர்முகமாகவே ஜாதி அமைப்பை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர். தாழ்ந்த ஜாதி, தாழந்த ஜாதி என்று ஒப்பாரி வைப்பவர் எங்களை உயர் ஜாதியினர் ஆக்குங்கள் என போராடட்டும் பார்ப்போம்! அரசு அவர்களை உடனே உயர் ஜாதியினராக ஆக்கி விடும். அதற்கு இவர்கள் தயாராக இல்லை.
ஜாதியை ஒழிப்பதற்கும், ஜாதியை மாற்றுவதற்கும் நம் நாட்டில் சட்டத்தில் இடமில்லை. ஆனால் ஒருவர் தாமாகவே வந்து எனக்கு ஜாதி அடையாளம் வேண்டாம் என்று மனு செய்தால் அவருக்கு ஜாதியில்லா சான்றிதள் வழங்கப்படும். அவருக்கு உயர் ஜாதி அந்தஸ்த்து வழங்கப்படும். இப்படி எல்லோரும் செய்தால் தான் ஜாதி அடையாளம் நாளடைவில் மறையும். இன்னும் நூறு ஆண்டுகளில் ஜாதிகளின் பெயர்கள் வேண்டுமானால் இருக்கும். ஆனால் உயர் ஜாதி, கீழ் ஜாதி என்ற வகைபாடு இருக்காது. அனைவருமே பொருளாதாரத்தில் உயர்ந்து சம ஜாதி ஆகிவிடுவர்.
வடநாட்டில் ஒவ்வொருவர் பெயரிலும் ஜாதி அடையாளம் இருக்கும். இதனால் பெயரை வைத்து அவர் ஜாதி அடையாளம் இருக்கும். இதனால் பெயரை வைத்து அவர் ஜாதிய அடையாளம் தெரிந்து சமுதாயத்தில் அவருக்கு அவலம் ஏற்படும். இப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றம் நாடி அவர் பள்ளி, கல்லூரி சான்றிதள்களில் இருக்கும் ஜாதி பெயர் அடையாளத்தை நீக்கி இப்போது சமுதாயத்தில் மற்றவர்களைப் போன்று பெருமிதத்துடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் அவருக்குரிய ஜாதி மாறவில்லை.
இந்து மதத்தில் தான் ஜாதி வேறுபாடு என்றால் கிறிஸ்தவ, முஸ்லீம் மதத்தில் ஏன் இவைகள் இருக்கின்றன? கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்கள் தங்கள் மதங்களில் ஜாதி பாகுபாடு கிடையாது என்பதையல்லவா வலியுறுத்துகிறது. கிறிஸ்தவ மதத்தில் இந்து மதத்தை விட கொடூரமான ஜாதி பாகுபாடு இருக்கிறது. இது விஷயமாகவும் நீதிமன்றத்தில் வழக்குகள் விவாதிக்கப்பட்டுள்ளன. இங்கு நீதிமன்றங்கள் கிறிஸ்தவ, முஸ்லீம் மத அமைப்புகளின் தலைமை தாங்கள் ஜாதி அடையாளத்துடன் அந்த மதத்தில் ஒருவர் இருக்க விருப்பம் தெரிவித்தால் அதை அங்கீகரிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது முக்கியமாக மதம் மாறிச் சென்றவர்களுக்குப் பொருந்தும்.
மொத்தத்தில் பார்த்தோமென்றால் ஜாதியை ஒழிப்பதற்கோ, ஜாதி மாறுவதற்கோ சட்டத்தில் இடமில்லை. இருப்பினும் அகிலத்திரட்டின் கருத்துப்படி ஜாதி அமைப்புகள் இருந்தாலும் காலப்போக்கில் ஜாதிகள் அனைத்தும் சம அந்தஸ்துப் பெற்று எல்லா ஜாதிகளும் சமமாகப் பார்க்கப்பட்டு எல்லா ஜாதியும் சமநிலை அடையும் என்பது உண்மை. அப்போது ஜாதி பாகுபாடு இருக்காது. ஆனால் ஜாதி இருக்கும்.
Leave a Reply