ஓஷோ
எதையும் கெட்டது என்று சொல்லும் போது அது இருப்பதற்கு தளம் போட்டுத் தந்து விடுகிறாய். எப்போதுமே நல்லது எதுவும் கெட்டதைப் போல பலமாக இருப்பதில்லை. பிறர் சொல்லி நீ செய்வது நல்லதாகிறது. நீயே செய்ய விரும்புவது கெட்டதாகிப் போகிறது.
சரிதான் நல்லது கெட்டதைப் போலப் பலமானதாக இருப்பதில்லை. கெட்டதை நீயாகத்தான் விரும்பிச் செய்கிறாய்! நல்லது என்பது பிறர் உன்மீது திணித்து வைத்திருப்பது தானே!
நல்லதை எதிர்க்கிறாய். அதைக் கை கொள்வது அடிமைத்தனமாகத் தெரிகிறது. ஒரு தளையாகிப் போகிறது. கெட்டது சுதந்திரமாகத் தெரிகிறது.
சொர்க்கத்துக்குள் உன்னைக் கட்டாயமாகத் திணித்து வைத்தால் அதிலிருந்து ஓடிப் போய் நரகத்தில் விழுந்து விடுவாய். இங்கே சுதந்திரமாவது இருக்கிறதே என்பாய். இந்த மகான்கள் இருக்கிறார்களே, அதுதான் பிறர் மகான்கள் என்று சொல்கிறார்களே அவர்களும் ஆத்திகர்களும் மனிதனின் பிரக்ஞைக்கு நிறையத்தான் தீங்கு செய்துவிட்டார்கள். அளவிட முடியாத தீங்கைச் செய்து விட்டார்கள்.
ஒரு நிகழ்ச்சி. ஒரு நண்பர் தன் மகன் புகைபிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டார். ஒரே கவலையாகி விட்டது. சின்னப்பையன் பத்து வயதுதான் இருக்கும்.
அவருக்குக் கவலை வந்துவிட்டது. நல்லவர்… ஆத்திகர். எனவே என்னிடம் வந்தார். என்ன செய்வது என்றார். ஒரு பாக்கெட் சிகரெட் கொண்டு வா. மகனையும் அனுப்பி வை என்றேன்.
அந்தப் பையனை புகைபிடிக்க சொல்லி கட்டாயப்படுத்தினேன். இருபது சிகரெட்டுகள். மிரட்டினேன். குடித்தே ஆக வேண்டும் என்று மிரட்டினேன். முழு பாக்கெட்டையும் காலி செய்யாவிட்டால் அடிதான் என்று கையில் குச்சியை வைத்துக் கொண்டு மிரட்டினேன். அத்தோடு முடிந்து விட்டது. இனி யாரும் என்னைக் கட்டாயப்படுத்தி சிகரெட் பிடிக்க வைக்க முடியாது என்றான்.
கெட்டதை ஒரு தளையோடு சேர்த்துப் பார்ப்பது நல்லது. ஆனால் அதை யாரும் அப்படிப் பார்ப்பதில்லை. உன் தந்தை நீ சிகரெட் பிடிக்க கூடாது என்கிறார். உன் தாய் நீ சிகரெட் பிடிக்க கூடாது என்கிறார்கள். சர்ஜன் ஜெனரல் நீ சிகரெட் பிடிக்கக் கூடாது என்று உத்தரவிடுகிறார். திடீரென இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற ஆசை எழுகிறது. புகைப்பிடித்தே ஆகவேண்டும் என்று இருக்கிறது. அப்படி செய்வது தான் சுதந்திரம் என்று தோன்றுகிறது. பிறர் என்ன சொல்லுகிறார்கள். என்பதைப் பற்றிய கவலை இல்லாத சுதந்திரம் என்று தோன்றுகிறது. அவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு உன்னைப் புகைபிடிக்க கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எதையாவது தடை செய்தால் அதைச் செய்யத் தூண்டுவதாகிப் போகும். எதையாவது தடை செய்தார் அதைப் பலரும் செய்வார்கள். செய்யட்டும் விடு என்றால் தானாகவே இல்லாமல் போய்விடும். எதை உன்னிடமிருந்து ஒதுக்கி வைக்கிறாயோ அதன் மேல் உனக்கு நாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இதைச் செய்யபோவதில்லை என்று சொல்லும் போதெல்லாம் உன் அடிமனம் செய்து பார், அருமையாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டே இருக்கும். எனவே இதைப் போன்ற விடிவட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளாதே.
Leave a Reply