க. லலிதாஅரிகரசுதன்
உதவிப்பேராசிரியர், கணினி துறை, கே.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி
“கற்றதுகைம் மண்ணளவு கல்லா
துலகளவென் (று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்”
எனும் ஔவையின் இப்பாடல் வரிகளை வாசிக்கையில் கல்விபற்றிய அகன்ற புரிதல் நமக்குள் ஏற்படுவதையும் தமிழ் இலக்கியங்களின் வழியாக நாம் கண்டடைகின்ற வாழ்வனுபவங்களின் தரிசனத்தை உணர்வதையும் தவிர்க்க இயலாது.
கல்வி பொன் பொருளை சம்பாதிப்பதற்கானதென்பதைத் தாண்டி வாழ்வுத்தேடலின் உள்ளார்ந்த பொருளை அர்த்தப்படுவதாக அமைவதாகும். கல்வி தனி நபரின் சிந்தனை, செயல் போன்றவற்றில் செம்மையான மாற்றத்தை ஏற்படுத்தி வாழ்வின் இலட்சியப்பயணத்தை கடினங்களுக்கு மத்தியிலும் தொய்வில்லாமல் முன்னோக்கி நகர்த்த உதவுகின்றது.
பொதுவாக கல்வி என்பது கல்விக்கூடங்களில் கற்பது மட்டுமே என்று அனைவரும் நம்புகின்றனர். இது ஒரு மூடநம்பிக்கை ஆகும். கல்வி என்பது முறைசார் கல்வி, முறைசாரா கல்வி, அனுபவக் கல்வி என பன்முகத் தன்மை கொண்டது.
எனவேதான் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு ஆகாது எனும் பழமொழி உள்ளது. ஏட்டில் சுறைக்காய் என்று எழுதி வைத்திருந்தால் அதை கறிக்கு பயன்படுத்த முடியுமா என்ன?
அதுபோலதான் ஏட்டுக்கல்வி. அதாவது கல்விக்கூடங்களில் நாம் பெறும் கல்வி. அப்படியானால் நிறுவனக்கல்வி அறிவு, அக்கல்வியை செயல்படுத்தும் செய்முறை அறிவு, அதன்வழியாக கிடக்கின்ற அனுபவ அறிவு, ஆசிரியர்கள் அல்லாத மற்றையோர்களிடம் கிடைக்கின்ற முறைசாரா அறிவு, தான் வாழும் சமூகத்தின் வழியாக கிடைக்கின்ற மரபார்ந்த அறிவு என பன்முக கற்கைச்சூழல் ஒருங்குபெற்றால் மட்டுமே கல்வி என்பதன் முழு பொருளும் விளங்கக் கிடைக்கும் என்பதை உணர்தல் வேண்டும்.
இங்கிருந்துதான் கற்றது கைம்மண்ணளவு எனும் வாக்கியத்திற்கான பொருள் விரிவை அர்த்தப்படுத்திக் கொள்ள இயலும்.
எனவே கற்றல் செயல்பாடு என்பது எவ்வளவு பரந்துபட்டதாக இருக்கின்றது. இக்கற்றல் செயல்பாட்டிற்காகத்தான் நமது முன்னோர்கள் பல பயணங்களை மேற்கொண்டிருக்கின்றனர். இப்பயணங்கள் மட்டுமே இவ்வுலகின் நாம் எவ்வளவு சிறிய துகள் எனும் சிந்தனையை நமக்கு தந்து கற்றது கைம்மண்ணளவு எனும் உணர்வைத் தந்து உள்ளொளி கிளர்ந்து மனம் ஆச்சரிய ஆனந்தத்தை தரும்.
இல்லையேல் என்ன வசதி வாய்ப்புகள் இருந்தும் ஆனந்தம் அற்று புலம்பி வாழ்வை கடனெனக் கழிப்பவராகவே இருக்க முடியும்.
கல்வி மூலம் கிடைக்கின்ற கற்றறிந்த ஞான நிலையின் அகமே கடவுள் நிலை. அதுவே கடவுளாக மாற்றம் கொள்கிறது. அதாவது கல்வி கடவுள் நிலையைத் தரவேண்டும்.
இன்றைய போட்டி நிறைந்த இயந்திரத்தனமான வாழ்வின் வேகமாக எரிந்து முடிகின்ற தீக்குச்சிகளென மாறாது வாழ்ந்து தீர்ந்தபின்னும் வானில் மின்னும் நட்சத்திரமாய் இளையோர்களே நீங்கள் மாறவேண்டும். அதற்காக கல்வி கற்க வேண்டும் என்று அனைவரையும் வாழ்த்துகிறேன்.
Leave a Reply