கணவரிடமிருந்து தப்பிப்பதற்காக மயங்கியது போல நடித்த பெண்ணை அறிவு பூர்வமாக செயல்பட்டு எழுப்பினேன் என்கிறார் சிதறால் பி ஏ.தங்கராஜ் ஆசான்.
புதிய தென்றலுக்காக கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் (தேமானூர்) பகுதியைச் சேர்ந்த பொதுமக்களால் பி ஏ தங்கராஜ் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் தங்கராஜ் ஆசான் அவர்களை சிதறாலில் உள்ள அவரது வைத்தியசாலையில் சந்தித்தோம்.
பிஏ தங்கராஜ் என்று தாங்கள் அழைக்கப்படுவதற்கான காரணம் என்ன?
எனது பெயர் தங்கராஜ் ஆகும். இந்தப் பகுதியில் முதன்முதலில் பிஏ படித்தது நான் மட்டும் தான் மேலும் இதே பெயரில் வேறு சிலர் இருந்ததால் என்னை ஊர் மக்கள் பி ஏ தங்கராஜ் என்று அழைத்து வருகின்றனர்.
தாங்கள் சிலம்பம் வர்மம் போன்றவற்றை கற்றுக் கொள்ள காரணம் என்ன?
எனது சின்ன வயதில் கோவில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் சிலம்பம் விளையாடுவதை பார்க்கும் போது எனக்கும் சிலம்பம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. ஆகவே பல ஆசான்களிடம் சிலம்பம் மற்றும் வர்மம், வைத்தியம் ஆகியவற்றை கற்றுக் கொண்டேன்.
எந்தெந்த ஆசான்களிடம் கலைகளை கற்றுக் கொண்டீர்கள்?
எனது 21 வது வயதில் ஆற்றூர் என்ற பகுதியில் உள்ள பொன்னுமுத்து ஆசான் அவர்களிடம் சிலம்பம் கற்றேன். பின்னர் சுவாமியார்மடம் பகுதியைச் சேர்ந்த முட்டைக்கார சாகிப்பு, என்ற ஆசானிடமும் சிலம்பம் கற்றுக் கொண்டேன்.
அதன் பின்னர் தோட்டவரம் பகுதியை சேர்ந்த சிவதாணு ஆசான் என்பவரிடமும் நெய்யாற்றின் கரை பகுதியை சேர்ந்த பொன்னு ஆசான் என்பவரிடமும், இலவுவிளை .ஆசான் என்பவரிடமும், செருப்பாலூர் பொன்னப்பன் ஆசான் என்பவரிடமும், அவரது அப்பா பரமு ஆசான் என்பவரிடமும் சிலம்பம் மற்றும் வர்ம கலைகளை கற்றுக் கொண்டேன்.
தங்களது சிலம்பம் & வர்மம் கலை பயணத்தில் மறக்க முடியாத சம்பவங்கள் எவை
ஒருமுறை சிதறாலில் எனது தோட்டத்தில் நின்று கொண்டிருந்த போது சகோதரர்கள் இருவருக்கு இடையே தகராறு நடந்து கொண்டிருந்தது. அதனை சமாதானம் செய்வதற்காக நான் சென்று அமைதியாக இருவரும் சமரசமாக செல்லும்படி கேட்டுக் கொண்டேன். ஆனால் அந்த இரண்டு பேரில் ஒருவர் என்னை கெட்ட வார்த்தைகளால் தகாத விதமாக பேசினார். நான் மிகவும் பொறுமையாக இருந்தேன். அங்கே நின்று கொண்டு இருந்தால் பிரச்சனை ஏற்படும் என்பதற்காக அங்கிருந்து நழுவி வீட்டுக்கு செல்வதற்காக வழியில் வரும்போது மீண்டும் அந்த நபர் வழியில் என்னை தடுத்து தகராறு செய்தார்.
மேலும் கெட்ட வார்த்தை பேசி தாக்குவதற்கு முயற்சித்தார். நான் திடீரென சுதாரித்துக் கொண்டு அவரிடமிருந்து என்னை காத்துக் கொள்வதற்காக அவரை தாக்கினேன். அவர் மயங்கி விழுந்து விட்டார். பின்னர் ஒரு நாழிகை நேரம் கடந்த பின்னர் அவர் மயக்கம் தெளிந்து சென்றார்.
அதேபோன்று சிதறாலில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றபோது அங்கு ஒரு ரவுடி ஹோட்டல் வாசலில் என்னை வழிமறித்து வேண்டுமென்று வம்பு செய்தார். மேலும் என்னை தாக்குவதற்கு முயற்சித்தார். நான் உடனே அவரை அடித்தேன். அவர் மயங்கி விழுந்து விட்டார். பின்னர் ஒரு நாழிகை நேரம் கழித்து தானாகவே எழும்பி சென்றார். இதனை அங்கிருந்தவர்கள் அனைவரும் வியப்புடன் பார்த்தனர். மேலும் பாராட்டினர். இவை எனது வாழ்வில் நடைபெற்ற முக்கியமான சம்பவங்களாகும்.
மேலும் நான் சிலம்பம், வர்மம் மட்டுமல்லாமல் வைத்தியமும் செய்து வருகிறேன். அகில இந்திய சித்த மருத்துவ கழகம் அமைப்பில் உறுப்பினராகவும் இருக்கிறேன். எங்களது பகுதியில் யாராவது அடியோ இடியோ பட்டு மயங்கி விழுந்தால் அவர்களை மருத்துவம் செய்து மயக்கத்தில் இருந்து எழுப்பி காப்பாற்றுவதற்கு என்னை பலர் அணுகுவதுண்டு. எனவே வர்மத்தால் பாதிக்கப்பட்டவர்களை எழுப்பும் அவசர மருந்துகளை ரகசியமாக என்னோடு எப்போதும் வைத்து இருப்பேன்.
அப்படி யாராவது அடிபட்டு மயங்கி கிடப்பதாக அழைக்கும் போது நான் சென்று பலரை மயக்கத்தில் இருந்து எழுப்பி காப்பாற்றி இருக்கிறேன்.
அதுபோல ஒருமுறை கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தாக்கியதில் ஒரு பெண் மயங்கி விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று சிலர் அழைத்தனர். நான் அங்கு சென்று அந்த பெண்ணை பரிசோதித்த போது அந்த பெண் கணவனின் வன்முறையிலிருந்து தப்பிப்பதற்காக மயங்கியது போல் நடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.
அதனை அறிவுப்பூர்வமாக கண்டு கொண்ட நான் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காமலேயே உளவியல் ரீதியாக அறிவுரை கூறி அவரது கணவரையும் எச்சரித்து அவர்களை மீண்டும் சேர்த்து வைத்தேன். இது எனது வாழ்வில் மறக்க முடியாத முக்கிய சம்பவம் ஆகும் என்றார் அவர். அவர் பல்லாண்டு காலம் மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்தி விடை பெற்றோம்.
பேட்டி கண்டவர்
ஜி. ஜெயகர்ணன், இணை ஆசிரியர்,
உதவி : திரு.R.அஜய்
Leave a Reply