– கே.பி.பத்மநாபன்
நீர்நிலைகள் நிலத்தினிலே இல்லாதாயின்
நெடுமரங்கள் நீள்வயல்கள் மாய்ந்து போகும் ;
கார்மேகம் திரண்டெழுந்து மழை பெய்தற்குக்
காடுகளே காரணமென்றறிதல் வேண்டும்;
நீர்வளமும் நிலவளமும் ஓங்குதற்கு
நிச்சயமாய் வனவளத்தைக் காத்தல் வேண்டும்;
சேர்ந்திந்த முவ்வளமும் சிறந்திட்டால் தான்
செகத்தினிலே உயிர்த்துடிப்பை காண்போம், தின்னம்!
ஊர்வெளியில் வீணாகும் நீரை எல்லாம்
ஊருணியில் சேமித்தால் இயற்கை அன்னை
மார்பினிலே சுரந்திடுமே உயிர்நீர் என்றும்;
மண்செழிக்கும் மழைநீரை ஏரி தன்னில்
சேர்த்திட்டால் செழித்திடுமே வனவளங்கள்;
சிறுபுல்லும் முளைக்காத வாறு மாந்தர்
பார்மீது வளங்களையே அழித்து விட்டால்
பஞ்சம் தான் பாராளும் விரைவில் திண்ணம்!
வேர்பிடித்த மரங்களையே வெட்டி வீழ்த்தும்
வினையாவும் கொலை செய்யும் கொடுமைக் கொப்பே;
ஏர்கலப்பை உழுவயல்கள் அழிவதெல்லாம்
ஏரிகளைக் கொன்றழித்துப் புதைப்பதால் தான்;
நீர்வளத்தை, வனவளத்தை மற்றும் இந்த
நிலவளத்தைக் கொன்றழிக்க மாந்தருக்கு
யார்கொடுத்தார் அதிகாரம்? காத்தற்கன்றி
யாருக்கும் அழிப்பதற்கிங்குரிமை இல்லை!
Leave a Reply