– முனைவர் முல்லைத்தமிழ்
பித்துக்காய்வர்மம்
சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான கைக்கிட்டிக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் பித்துக்காய்வர்மம் பற்றி அறிவோம்.
நேர் வர்மத்தின் பின்புறம் சற்று தாழ்வாக அமைந்த எல் வரிசையின் தாழ்வோரமாக அமைந்த நுறுக்கெல் எனப்படும் விலா எலும்பின் சார்பில் இவ்வர்மம் அமைந்துள்ளது. அதாவது கல்லீரல் பதியின் பின்பக்கம் பித்துக்காய் வர்மம் அமைந்துள்ளது. பித்திக்காய் வர்மம் என்னும் வேறுபெயராலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது.
“கிடத்தும் நேர்வர்மத்தின் பின்பக்கத்தில்
கிளர் நொறுக்கெல் சார்வோரம் பித்துக்காயாம்”.
–வர்ம குருநூல்
மேலும்,
“தடத்திலுயிர் மாழ்வதற்கும் இது தான் வர்மம்
சயமீறி வலி மிகுந்து செத்தாலும் சாகும்
குடவயிறு போல் பெருமிமேல் ஏங்கலாகி
குலைபிரிந்து போவதற்கும் இதுதான் காலம்
திடமறிந்து பெரியோர்கள் செய்யார் செய்தால்
ஜீவிக்க வருத்தமுண்டு செய்துபாரே”.
– வர்ம குருநூல்
“ஆமென்ற பித்துக்காய்வர்மம் இளக்குதற்கு
பேசுகிறேன் வெகு கடின மாத்திரையானால்
நாமென்ற நிலைமறந்து குருவைப்போற்றி
கூறரிய மருந்துகளும் கைமுறையும் செய்துபாரு
போமென்ற பொன்தண்டடங்கல் மேலனுக்கி
புகழ்பெருகும் கலைநிலையும் கபநிலையும்
காமென்ற காதின் கீழ் பிணிநரம்பும்
பேணியனுக்கியே உச்சியில் அடித்துப் பாரே”.
– வர்ம ராஜமுத்திரை
எனவும் குறிப்பிடுகிறது. மேலும்,
கொள்ளும்வன்மம் பித்துக்காய் குணத்தை இனி கேட்கின்
அள்ளும் சடலம் நடுக்கமுடன் அழகாய் கூனிகுழைந்துமே
துள்ளும் நடை நிலைமாறி துடுக்காயயரும் தொடர்ந்தங்கே
கள்ளும் ஊறலுண்டாற்போல் முடமுமசையும் காண்பீரே.
–வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
பித்துக்காய் வன்மம் கொண்டால் அதன் குணத்தை இனி கேட்பாயாகில், பாதிப்படைந்த உடல் நடுக்கமுற்று கூனிக்குழைந்து விடுவதோடு, நடையானது நிலை தடுமாறி அயர்ந்துவிடுவதால் கள்ளும் ஊறலும் உண்டதுபோல் உடலும் அசையும் காண்பீர்கள் என்பதாம்.
காண்பீரளவு மிகக்கொள்ளில் கனிந்தே நடுங்கி படபடத்து
கண்ணில்நீரும் கலக்கமுடன் ஏங்கல்விக்கல்பொருமலுடன்
தண்ணீர்போலே உடல்வியர்த்து தளர்ந்துமயங்கிஜன்னியுடன்
மண்ணில் சாயும் மரணமதாம் என்று முன்னோருரைதானே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மாத்திரை மீறி இவ்வர்மம் பாதிப்படைந்தால் உடலானது பழம்போலாகி நடுநடுங்கி படபடப்பு உண்டாகும். தன்னை அறியாமல் கண்ணில் நீருடன் கலக்கமுண்டாகும். ஏங்கலுடன் விக்கலும், வயிறுபொருமலும் உண்டாகும். தொடர்ந்து உடல் வியர்த்து தண்ணீர்போல் ஓட மயக்கமுடன் சன்னியும் உண்டாகி நினையாத நொடியில் மரணித்து மண்ணில் சாய்ந்துவிடும் என்பதாம்.
பித்துக்காய் வன்மம் பின்னுறும் குணத்தைக் கேட்பின்
வித்தறப் பதியாவண்ணம் மெல்லுறக் கொள்ளுமாகில்
சித்துறும் சினமும் மிஞ்சும் மூச்சதும் விரைப்புகாட்டும்
தத்துறும் வலிகள் தோன்றி தரணியிலிறுத்தும் தானே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
பித்துக்காய் வர்மம் லேசாக தாக்கம் கொண்டால் பின்னால் உண்டாக்கும் குணத்தை கேட்பாயானால், சித்தத்தை கெடுக்கும் சினமும் மிஞ்சி, மூச்சிரைப்பு தோன்றி உடல் இயங்கா முடியவண்ணம் வலிகளைக் காட்டி தரணிவாழ் மனிதர் தமக்கும் பலவகை துன்பங்களை உண்டாக்கும் என்பதாம்.
வன்மமாம் பித்துக்காய் தான் பல்வகை பயனும் செய்யும்
கன்மமாய் வலிகள் போக்கும் கருணையும் உள்ளிலங்கே
தன்மமாய் பெருகியோடும் தளர்ந்திடும் அசதி போக்கும்
உன்மமாயறிந்து தாக்கில் உறப்புறும் கடமும் தானே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
பித்துக்காய் வர்மம் பலவகை நன்மைகளைச் செய்யும். நீண்டநாள் தீராத வலிகளையும் போக்கும். அடிக்கடி சினங்கொள்ளும். குணத்தை மாற்றி மாற்றி மனதில் கருணையைத் தோற்றுவிக்கும். தளர்ச்சையை உண்டாக்கும். அசதியை மாற்றும். இதனை முறைப்படி அறிந்து தூண்டல் செய்தால் இந்த உடலும் உறுதிபெறும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.
இவ்வர்மம் மாத்திரை மீறிக்கொண்டால் அந்த கணமே கடினமானதாகும். சில வேளைகளில் சந்திரகலையில் இவ்வர்மம் கொண்டால் உயிர்விடும் அளவிற்கு சயம் மீறி மரணம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. வயிறு குடம்போல் பெருமி மேல்நோக்கி ஏங்கல், நெஞ்சுக்குள் படபடப்பு இவை தோன்றி மரணம் ஏற்படுத்துவதும் இந்த இடமே ஆகும். இதனை விவரம் தெரிந்த பெரியவர்கள் யாருக்கும் செய்யமாட்டார்கள். ஒருவேளை செய்துவிட்டால் உயிர்வாழ்வதற்கு கடினமானதாகி விடும்.
இவ்வர்மம் இளக்குவதற்கு வெகு கடினமானதாகும். பாதிக்கப்பட்டவரை மெல்ல தூக்கி இருத்தி, பாதிப்பின் தன்மைகளை அறிந்து வர்மாணி தடவுமுறைப்படி தடவி, மாறல் தடவல், பக்கதாரை தடவல் செய்து, ஏற்றியிறக்கி தடவி, அடங்கல்களை தூண்டிவர நலமாகும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு காசம், செரியாமை, உடல் முழுவதும் குளிர்ந்து காணப்படுதல், தாங்கமுடியாத வலி போன்ற பின்
விளைவுகள் உண்டாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தை தகுந்த தூண்டுமுறை நுட்பங்களைப் பயன்படுத்தி தூண்டிவர, செரியாமை, பசியின்மை, வாயுநோய்கள், வீரியக்குறைவு போன்ற நோய்கள் குணமாகும் என அனுபவமிக்க வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
Leave a Reply