கருமேகம் சூழ்கையிலே கழனிமகன் உள்ளம்
கதிரோனைக் கண்டலரும் கமலம்போல் துள்ளும் ;
தருக்களுடன் தரைவாழும் இன்னுயிர்கள் யாவும்
தமை மறந்த மகிழ்வாலே தாமாகக் கூவும் ;
ஒருதுளிதான் விசும்பின் நீர் வீழ்ந்திட்ட போதில்
உலர்ந்திட்ட பாறையிலும் உயரும்புல் காடு ;
நெருப்பெனவே வெய்யோனால் வெந்திட்ட மண்ணும்
நிமிடத்துள் தான் குளிர்ந்து சுகமுண்டு பண்ணும்!
அருமகிழ்தாய் மன்னுயிரை வாழ்விக்கும் மாரி
அகத்துனவும் அரும்தாக நீருமென ஆகி
கருவறைக்கும் கல்லறைக்கும் இடைப்பட்ட வாழ்வைக்
காப்பதனால் அஃதே தான் முதற்கடவுளாகும் ;
பெரும்பஞ்சம் நீக்கி உயிர் பேணுகின்ற மழையே
பேராற்றல் நிறைந்திட்ட பெருங்கடலின் கொடைகாண் ;
ஒருதுளி தான் விசும்பின் நீர் இல்லாது போயின்
உலகத்தின் பெயர்மாறும் சுடும்பிணக்காடென்றே!
இருப்பதுவும் இல்லாமற் போவதுவும் எல்லாம்
இயற்கையிறைப் பெருங்கொடையாம் மழைநிதியால் தான்காண்;
உருப்பெற்ற இவ்வுலகம் உருள்கின்ற மெய்யை
உணர்த்துகிற ஆதார உயிர்மூச்சு மழையே;
பருகும் நீர் பாசனநீர் பன்னீரு மாகிப்
பாரிதனைக் காப்பதனால் மழைமாண்பைப் போற்றித்
திருவள்ளுவருரைத்தார் வான்சிறப்பை அந்தத்
தெய்வத்தின் வாழ்த்துக்குப் பின்னரெனக் காண்பீர்!
– கே.பி.பத்மநாபன்
Leave a Reply