குடல்புண்

குடல்புண்

  • By Magazine
  • |

டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S)

வயிற்றில் ஏற்படும் புண்களையும், சிறுகுடலின் முன்பகுதியில் ஏற்படும் புண்களையும் பொதுவாக நாம் வழக்கத்தில் குடல்புண் (அல்சர் – Peptic ulcer) என்று அழைக்கிறோம்.

நாட்பட்ட குடல்புண்நோய் உள்ளவர்கள் உடலும், மனமும் குன்றி போவதால் இதனை குன்மம் என சித்தமருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயிற்று பகுதியில் ஏற்படும் புண்களை வயிற்றுப்புண், Gastric ulcer, Stomach ulcer என்று அழைப்பதுண்டு.

வயிற்றுபகுதியை தொடர்ந்து வரும் சிறுகுடலில் ஏற்படும் புண்களை- சிறுகுடல் புண் (duodenal ulcer)) என்று அழைக்கப்படுவதுண்டு.

குடல்புண் நோயினால் சுமார் 4 முதல் 10 சதவீதம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக நடுத்தர வயது மற்றும் முதிர்ந்த வயதுடையவர்கள் அதிகமாக இந்நோயில் பாதிக்கப்படுகிறார்கள்.

குடல்புண் நோய் உண்டாவதற்கான காரணங்கள்

வயிற்றில் ஜீரணத்திற்காக சுரக்கப்படும் திரவத்தில் அரிக்கும் தன்மையுள்ள ஹட்ரோகுளோரிக் அமிலம் உள்ளது. இதன் அமிலத்தன்மை பொதுவாக PH 1.5 முதல் 3.5 ஆக இருக்கும். பட்டினியாக இருக்கும் போது PH 1 முதல் 2 ஆக இருக்கும். இது வயிற்று சுவற்றை பொசுக்கி விடும்.

ஆகவே வயிற்று சுவற்றை பாதுகாப்பதற்கு கடினமாக சளிச்சவ்வும், அமிலத்தை எதிர்த்து சளிச்சவ்வை பாதுகாப்பதற்கு சளிச்சவ்வில் காரத்தன்மை உள்ள (Bicarbonate) சுரப்பும் உள்ளது. மேலும் வயிற்றுப்பகுதியில் உள்ள அதிக இரத்த ஓட்டமும், புண் ஏற்பட்டால் உடனே சரிசெய்யும் (Rapid cell renewel) தன்மையும் உள்ளது.

மேற்கண்ட காரணிகளால் வயிற்று சுவர் பாதுகாக்கப்படுகிறது. மேற்கண்ட காரணிகளில் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது அதிகமாக அமிலத்தன்மை உள்ள சுரப்பு சுரந்தாலோ வயிற்று சளிச்சவ்வு படலம் அரிக்கப்பட்டு குடல்புண் உண்டாகும்.

நேரத்திற்கு நேரம் உணவு உண்ணாமல் இருப்பது, பட்டினி இருப்பது.

நாட்பட்ட நோயால் பாதிக்கப்படுவது. அதிக கவலை, மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது.

அதிக காரமுள்ள உணவு உண்பது, தொடர்ந்து புகைப்பிடிப்பது மற்றும் மதுப்பழக்கம்.

மருத்துவர் ஆலோசனையன்றி வலி நிவாரணி மருந்துகள் மற்றும் பிற மருந்துகள் உண்பது. ஆகாரத்திற்கு பிறகு சாப்பிட வேண்டிய மருந்துகளை ஆகாரத்திற்கு முன் சாப்பிடுவது.

                மேலும் Helicobacor pylori என்னும் நுண்கிருமியாலும் குடல்புண் ஏற்படலாம்.

குடல்புண் நோய்க்கான குறிகுணங்கள்

  • மேல் வயிற்றுப்பகுதியில் எரிச்சல், காந்தல், கடித்தல் போன்ற வலி
  • வயிற்றுப்பகுதியில் புண் உள்ளவர்களுக்கு உணவில் வெறுப்பு, உணவு சாப்பிட்டதும் வலி அதிகரிக்கும், உடல் எடை குறையும்.
  • சிறுகுடல் பகுதியில் புண் உள்ளவர்களுக்கு உணவு உண்டதும் வலி குறையும். சாப்பிட்டு சில மணி நேரங்களில் வலி அதிகரிக்கும். உடல் எடை அதிகரிக்கும்.
  • மேலும் நெஞ்சு எரிச்சல், அடிக்கடி ஏப்பம் எடுத்தல், உணவு எதிர் எடுத்தல், குமட்டல், வாந்தி போன்ற குறிகுணங்கள் உண்டாகலாம்.
  • சிலருக்கு பசி மந்தமாக இருக்கும். சிலருக்கு அதிகபசி இருக்கும். ஆனால் சிறிது சாப்பிட்டதும் வயிறு உப்பிசம் உண்டாகும். அடிக்கடி வயிறு கழிதல் உண்டாகலாம்.
  • சிலருக்கு இரத்தவாந்தி, மலம் கறுப்பாக இருக்கலாம்.

குடல்புண் நோயாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியவைகள்

  • நேரம் தவறாமல் உணவு உட்கொள்ள வேண்டும். பட்டினி இருக்க கூடாது.
  • முழு வயறு வரைக்கும் உணவு உட்கொள்ள கூடாது.
  • உணவு உண்டவுடன் படுக்கைக்கு செல்லக் கூடாது.
  • புகைபழக்கம், மதுபழக்கம், தேயிலை மற்றும் காப்பி இவைகளை தவிர்க்க வேண்டும்.
  • எண்ணெயில் பொரித்த மீன், இறைச்சி, பண்டங்கள் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.
  • சூடான உணவு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.
  • காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • சாம்பார், சட்டினி, மீன்குழம்பு, கறிகுழம்பு  போன்ற குழம்பு வகைகளை அதிக அளவில் விட்டு உண்ணக் கூடாது.
  • சாக்லெட் போன்ற இனிப்பு பண்டங்கள் வெறும் வயிற்றில் உண்ண கூடாது.
  • மனக்கவலை, மன அழுத்தம் தவிர்த்து நல்ல தூக்கத்தை உண்டாக்க வேண்டும்.
  • தினசரி யோகா பயிற்சிகள், சிறுநடை பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
  • சுய மருத்துவம் எடுக்கக் கூடாது.
  • அதிக புளிப்பு சுவையுடைய பழங்களை தவிர்க்க வேண்டும்.
  • உணவில் தயிர் அல்லது மோர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • எளிதில் ஜீரணமாகும் உணவுபொருள்களை உண்ண வேண்டும்.

குடல்புண் நோயை ஆற்றும் பானங்கள்

  • முட்டைகோஸ் சாறு 50 மில்லி, இளநீர் 150 மில்லி, தேன் 1 கரண்டி, அதிமதுர பொடி லு கரண்டி இவற்றை கலந்து ஆகாரத்திற்கு முன் பானமாக குடிக்கலாம்.
  • வெண்பூசணிகாய் சாறு 100 மில்லி, மோர் 100 மில்லி, சிறிது உப்பு சேர்த்து கலந்து குடிக்கலாம்.
  • சோற்று கற்றாழையின் பச்சைநிற தோலை அகற்றி உள் இருக்கும் சதையை கசப்பு நீங்கும் அளவிற்கு நன்கு கழுவி எடுத்தது 50 கிராம். இத்துடன் தயிர், சிறிது சீரகம் சேர்த்து நன்கு அரைத்து கலந்து குடிக்கலாம்.
  • சவ்வரிசியை நன்கு தண்ணீரில் வேகவைத்து அத்துடன் காய்ச்சிய பசும்பால் சேர்த்து ஆறியபின் குடிக்கலாம்.
  • காய்ச்சிய பசும்பாலுடன் சிறிது மஞ்சள் சேர்த்து ஆறிய பின் ஒரு கரண்டி தேன் கலந்து குடிக்கலாம்.
  • புளிக்காத விதை உடைய பன்னீர் திராட்சைப் பழத்தை கொட்டையுடன் அரைத்து சாறு பிழிந்து அத்துடன் பசும்பால் சேர்த்து குடிக்கலாம்.
  • வெண்டைக்காயை தண்ணீர் விடாமல் அரைத்து ஆகாரத்திற்கு முன் அருந்தலாம். இது வழுவழுப்பாக இருப்பதால் குடிப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும். குடலுக்கு மிகவும் சிறந்தது.
  • வெண்டைக்காயை சிறிதாக வெட்டி அத்துடன் சிறிது ஜீரகம், உள்ளி, வெந்தயம் சேர்த்து இரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து நன்று ஆறிய பின் குடிக்கலாம்.
  • சுரைக்காய் சாறு அருந்தலாம்.
  • புளிக்காத தயிர் அல்லது மோர் அருந்தலாம்.

குடல்புண்ணிற்கு ஆகும் காய்கறிகள்

  • முட்டைகோஸ்
  • சுரைக்காய்
  • வெண்டைக்காய்
  • வாழைக்காய்
  • தடியங்காய்
  • வெள்ளரிக்காய்
  • நெல்லிக்காய்

குடல்புண்ணிற்கு ஆகும் பழவகைகள்

  • ஆப்பிள்
  • மாதுளை
  • பன்னீர் திராட்சை
  • சப்போட்டா பழம்
  • நன்கு பழுத்த வாழைப்பழம்
  • பழுத்த கொய்யாப்பழம்
  • நன்கு பழுத்த பப்பாளிப்பழம்

குடல்புண்ணிற்கான சித்த வைத்திய முறைகள்

திரிபலா சூரணம்

                2 கிராம் அளவு சூரணத்தை 100 மில்லி தண்ணீர் கலந்து தினம் இரண்டு அல்லது மூன்று வேளை ஆகாரத்திற்கு முன் குடிக்கலாம்.

அதிமதுர சூரணம்

                2 கிராம் அளவு சூரணத்தை 50 மில்லி தேங்காய்பாலில் கலந்து தினம் இருவேளை  ஆகாரத்திற்கு முன் குடிக்கலாம்.

சங்குபற்பம்

100 மில்லி கிராம் அளவு சங்கு பற்பத்தை எடுத்து 5 சொட்டு பசு நெய்யில் கலந்து தினம் இருவேளை ஆகாரத்திற்கு முன் உண்ணலாம்.

மேலும் ஏலாதி சூரணம், காவிக்கல் சூரணம், குன்ம குடோரி மெழுகு, அண்டலேகியம், வில்வாதி லேகியம், உப்புச்செந்தூரம் போன்ற பல மருந்துகள் சித்த வைத்தியத்தில் குடல்புண் நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

நோய்குறி குணங்கள், நோயின் தீவிரத்தன்மை, உடல்நிலை இவற்றை பொறுத்து மருந்துகள் பயன்படுத்த வேண்டும் என்பதால் சித்தமருத்துவ அறிவுரையின் படி மேற்படி மருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கவனிக்க வேண்டியவைகள்

  • மலம் கறுப்பாக கழிந்தால்:

குடல் புண்ணில் இருந்து இரத்தம் கசிந்து ஜீரணமாகி கறுப்பு நிறத்தில் மலம் வெளிவருவதை குறிக்கும். இதனால் விரைவில் இரத்தசோகை ஏற்படும். இதற்கு உடனடியாக அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

சரிவர மருத்துவம் செய்யாத குடல்புண் நோயாளர்களுக்கு திடீரென தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டால் உடனே அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *