முரண்பாடுகளின் இணைதல்

  • By Magazine
  • |

– ஓஷோ

மக்கள் பலர் ஒளியைப் பற்றி சிந்திக்கும் போது இருட்டைப் பற்றிக் கவலைப்படத் தொடங்குகிறார்கள். வாழ்க்கையை பற்றி நினைக்கும் போது, சாவை எதிர்த்து சண்டைப் போடத் தொடங்குகிறார்கள்.

அதனால் தான் கடவுள் இருள், ஒளி இரண்டும் சேர்ந்தவர் தான் என்று சொல்லும் ஐதிகம் உலகில் இன்று வரை இல்லை. ஒரு ஐதிகம் கடவுள் ஒளியானவர், இருள் அற்றவர் என்று சொல்லுகிறது. கடவுள் ஒளி மயமானவர் என்று நம்பும் மக்கள் அவர் இருளே அற்றவர் என்று நினைப்பார்கள். கடவுள் இருளானவர் என்று சொல்லும் ஒரு ஐதிகம் இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை கடவுளுக்கு ஒளியே இல்லை. இரண்டுமே தவறுதான். ஏனெனில் இரண்டுமே தர்க்கரீதியாய் இருக்கிறது. அவர்கள் எதிரானதை மறுக்கிறார்கள். வாழ்க்கை மிகப் பரந்தது. அது மறுக்கப்படுவதல்ல, அணைத்துக் கொள்ளப்பட வேண்டியது.

ஒருமுறை சிறந்த கவிஞரான வால்ட்விட்மனிடம் ஒருவர் சொன்னார். விட்மன் நீ உன்னையே முரண்படுத்தும் வகையில் பேசுகிறாயே! ஒரு நாள் ஒன்று சொல்கிறாய், இன்னொரு நாள் அதற்கு முற்றிலும் எதிர்பதமாக ஒன்று சொல்கிறாய்.

வால்விட்மன் சிரித்து விட்டுக் கூறினார். நான் விஸ்தாரமானவர். எனக்குள் எல்லா முரண்பாடுகளும் இருக்கின்றன.

சிறிய மனங்கள் மட்டும் முரணற்றிருக்கும் மனம் குறுக குறுக முரண்பாடற்றத் தன்மை அதிகரிக்கும். மனம் விசாலமாய் இருக்கும் போது, அனைத்துமே இடம் பெறுகின்றன. அங்கு வெளிச்சம் இருக்கிறது, இருளும் அங்கே இருக்கிறது அவரது முழு மகிமையில்.

எதிர்பதங்களின் வழியே செல்லும் வாழ்க்கையின் இந்த சூட்சுமமான பாதையை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் எனில், இந்த மாறும் தன்மை, எதிர்துருவத்தின் உதவியை, அதன் சமன்படுத்தும் தன்மையை, அது கொடுக்கும் நாதத்தை, உருவாக்கும் பின்னணியை உணர்ந்தீர்கள் என்றால் பிறகு நீங்கள் சுவாங்தஸீவைப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் தாவோயிஸத்தின் முழுக் கோணமும் முரண்பாடுகளின் இணைதலை அடிப்படையாகக் கொண்டுதான் அமைந்துள்ளது. அவர்கள் யிங்,யாங் என்ற இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். அவை எதிர்பதங்கள். ஆண் பெண் என்பதைப் போல முற்றிலும் ஆண்களே உள்ள அல்லது முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே உள்ள ஒரு உலகத்தை யோசித்துப் பாருங்கள். அது இறந்து போனது போல் இருக்கும். அது பிறந்த கணமே இறந்து விடும். அதில் ஒரு உயிர்ப்புத்தன்மையே இருக்க முடியாது. அது பெண்கள் உலகமாய் இருந்தால் பெண்கள், பெண்கள், பெண்கள். ஆண்களே இல்லை. பெண்கள் தற்கொலை செய்து கொள்வார்கள். எதிரான ஒன்று தேவைப்படுகிறது. ஏனெனில் அது கவரக் கூடியதாயிரிக்கிறது. எதிரானது காந்தம் போலாகிறது. அது உங்களை இழுக்கிறது. உங்களை உங்களிலிருந்து வெளியே இழுத்துப் போடுகிறது. எதிர்துருவம் உங்கள் சிறையை உடைக்கிறது. உங்களை விசாலமானவர்களாக்கிறது. எப்போதெல்லாம் எதிர்பதம் மறுக்கப்படுகிறதோ, அப்போது நிச்சயமாய் துன்பமும் தொந்தரவும் இருக்கும். இதைத்தான் உலகத்தின் பல துன்பங்களை நாம் செய்து கொண்டு இருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *