பக்கத்திலிருப்போரின்
அன்பைத் தக்க வைக்க
ஏதாவது செய்துவிடுங்கள்
அதாவது
என்ன வேண்டும் என்றாலும்
கொஞ்சம் கொஞ்சமாய் உங்களை
வெட்டித் தின்றுக்கொண்டிருப்பதை
நீங்கள் மனம் உவந்து
ஏற்றுக் கொள்ளக்கூடாது
தெரியாததாகவே
ஏற்றுக் கொள்ள வேண்டும்
உங்களுக்குத் தெரியாது என்பதை
நீங்கள் தெரியப்படுத்திக்
கொண்டிருக்க வேண்டும்
அதாவது அது
ஒரு தொடர் செயல்பாடாகும்
சீராய் துடித்துக்கொண்டிருக்கும்
இதய முள்ளின் இசை
இரவின் அதிர்விலும் வெளிப்படும் அல்லவா
அந்த
நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்
யாமத்திற்கும் வைகறைக்கும் இடையில்
எழும்பும்
அருகில் துயிலும் மகனின் அழுகை
“அப்பா… அப்பா… உங்களை
யாரோ முகத்தில் வெட்டுகிறார்கள்”
என்று விதிர்க்கும்போது
ஒன்றும் இல்லை மகனே
ஒன்றும் இல்லை
என்று அவனை கட்டியணைத்து
இதயத்தின் சூட்டை
அவனின் தலைக்குத் தரவேண்டும்
தூங்குவதற்கு பயப்படும்
மகனின் தலையைக் கோதி
முத்தத்தின் வழியாக
மொத்தத்தையும் இறக்கி வைக்கும்போது
உங்கள் கைகனக்க
அவன் தூங்குவான்
நீங்கள் எழும்பிவிடலாம்
விடிந்துவிட்டதல்லவா…
………………………………..
– இரா. அரிகரசுதன்
Leave a Reply