இலையுதிர் காலம் போல
இங்கொரு வருடம் வீழ்ந்து
விலையிலா புதிய ஆண்டு
விடிதலைக் காண்பாய் நண்பா!
கலைந்தன துயரம் என்றும்
கவிந்திடும் இன்பம் என்றும்
அலையலையாக நெஞ்சுள்
ஆர்த்தெழும் ஆனந்தம் தான்!
மலையினைக் கடப்போம் என்றும்
மடுவினைக் கடப்போம் என்றும்
நிலைத்த நற்புகழை எல்லாம்
நித்தமும் பெறுவோம் என்றும்
குலைந்திடா பாரதத்தாய்க்
குடியர சோங்கும் என்றும்
கலைந்திடா கனவோடிங்கே
களிப்புடன் வரவேற்போம் நாம்!
உலகெலாம் போரொழிந்தும்
உறுபசி யாண்டும் தீர்ந்தும்
அலகிலா அமைதியோடே
அனைவரும் வாழ்வதற்காய்
நலம்பல வேண்டி இந்த
நல்லதோர் புத்தாண்டையே
வல இட கரமணைத்து
வருக என்றழைப்போம், வாரீர்!
– கே.பி.பத்மநாபன்
Leave a Reply